வியாழன், 1 மே, 2025

நாமக்கல் - சில வரலாற்றுக் குறிப்புகள்

நாமக்கல்! கடந்த நாற்பது ஆண்டுகால அளவில் நாட்டின் கவனத்தை ஈர்க்கும் சக்தியாய் விளங்கும் ஒரு காந்தக்கல். தொழில் வளர்ச்சியில் புத்துணர்வு பெற்று முன்னேறும் நகரம். லாரித் தொழில் வளர்ச்சியால் முன்னேறி இந்தியப் பெருவழிகளில் இரவும், பகலும் தம்புகழைப் பறை சாற்றுகின்றது. அத்துடன் வேளாண்துறை சார்ந்த துணைத் தொழிலான, கோழிப்பண்ணை, முட்டை உற்பத்தியில் உலகின் கண்களைத் தன்பால் இழுத்துள்ள ஒரு மாவட்டம். தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் வேகமாக வளரும் நகரம். மதுரை, திருச்சி, ஈரோடு, துறையூர், சேலம், பெங்களூர் ஆகிய நகரங்கட்குச் செல்லும் பெருவழியின் நடுநாயகமாய் விளங்குகின்றது. நாமக்கல் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளை இங்குக் காண்போம்.

1. சங்ககாலம்

நாமக்கல்லின் புகழும் பெருமையும் இன்று, நேற்று உருவானதன்று. ஈராயிரம் ஆண்டுகளை எட்டிப் பிடிக்கும் கால அளவு பெற்றது. சங்க இலக்கியங்களில் பலவாறு பாடப்பெற்ற நாமக்கல் கொல்லிமலையின் மேற்குச் சரிவில் அமைந்துள்ளது. கொல்லி மலையின் நீர்வளத்தால் கிழக்குப் பகுதியும், காவிரியின் நீர்ப் பெருக்கால் தெற்கும், மேற்குமாக மாவட்டம் வளம் பெற்று விளங்குகின்றது. கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரிக்குப் பின் தகடூர் அதிகமான் மரபினரின் பாதுகாப்பில் நாமக்கல் இருந்துள்ளது. அக்காலத்தில் இப்பகுதி கொல்லி கூற்றம் என்று வழங்கப்பட்டது. கொல்லிக் கூற்றத்தின் நடுகாவலனாக அதிகமான் மரபினர் இருந்தனர். கொல்லிமலையைக் கைப்பற்ற எண்ணிய தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, அதிகமானொடும், அவனுக்குத் துணை வந்த சோழ, பாண்டியர்களையும் வென்று கொல்லிமலையைக் கைப்பற்றினான். வெற்றியின் நினைவாகக் "கொல்லிப் பொறை” காசினையும் வெளியிட்டான். "கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறைய" என்று பதிற்றுப்பத்தில் பாடப்பெற்றான். 


“கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசை 
பல்வேல் தானை அதிக மானொடு 
இருபெரு வேந்தரையும் உடன்நிலை வென்று”

  

என்பது பதிற்றுப்பத்து (8ஆம் பத்து) கூறும் செய்தியாகும். 

2. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் 

சங்க காலத்திற்குப் பின் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் அதிகமான்கள் மீண்டும் வருகின்றார்கள். அறுபத்தி மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய புகழ்ச் சோழர் உறையூரிலிருந்து தமக்குரிய நகரமாகிய கருவூருக்கு வந்தார். சோழ அரசர்க்குத் திறை செலுத்த மன்னர்கள் திரண்டனர். திறை செலுத்தாத மன்னவனும் உள்ளானோ? என அரசர் வினவினார். “அளந்த திறை முறை கொணரா அரசன் ஒருவன் உளன்.” என்று அமைச்சர் விடையறுக்கின்றார். அவர் யார் என அரசர் வினவ, “அதிகன்னென்பான் அவன். அண்மையில் உள்ள உயர்ந்த மலைசூழ் மலை அரணுக்குள் இருப்பவன்” என அமைச்சர் பதிலுரைக்கின்றார். சோழர் படை சென்று அரணழித்து அவனைக் கொணர்க! என அரசர் ஆணையிடுகின்றார். அதன்படி சோழர் படை திரண்டு அதிகனின் மலை அரண்களைத் தகர்த்து அதிகனை தேடுகின்றது. அதிகமான், “கொடிமா மதில் நீடு குறும்பொறையூர்” அரணில் ஒளிந்து கொண்டான். சோழர் படைகள் அரண்களை அழித்து அதிகனைச் சிறைப்பிடித்துப் புகழ்ச் சோழரின் முன் நிறுத்துகின்றது. அதிகன் தங்கிய இடம் இன்றைய நாமக்கல்லே ஆகும். அக்காலத்தில் குறும்பொறையூர் என்று வழங்கப்பட்டது. “கொடி மா மதில் நீடு குறும்பொறையூர்” எனப் பெரியபுராணம் குறிப்படும் ஊர் நாமக்கல்!


“வடிவேல் அதிகன் படைமா ளவரைக் 
கடிசூழ் அரணக் கணவாய் நிரவிக் 
கொடிமா மதில் நீடு குறும் பொறையூர் 
முடிநே ரியனார் படைமுற் றியதே” 

என்ற பெரியபுராணப் பாடலினால் குறும்பொறையூரைச் சோழர் படை முற்றுகையிட்டது தெரிகிறது. கருவூரிலிருந்து சோழர் படை மோகனூர் வழியாகக் காவிரியைக் கடந்து வந்தது. நாமக்கல்லின் தெற்கில் நெடிய மலைத் தொடர்கள் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. இம்மலைத் தொடரையே ஓங்கு எழில் சூழ் மலையரணம் என பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. மலைத் தொடரைக் கடப்பதற்குச் சோழர் படை மலைத் தொடரைத் தகர்த்து வழி ஏற்படுத்தியது. அப்படித் தகர்க்கப்பட்ட இடம் இன்றைய கணவாய்ப்பட்டி ஆகும். இதையே “கடிசூழ் அரணக் கணவாய் நிரவி” எனப் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. கணவாய் வழியாக வடக்கு நோக்கி வந்த சோழர் படை இன்றைய நாமக்கல்லைச் சூழ்ந்து முற்றுகையிட்டது. நாமக்கல் குறும்பொறையூர் என்பது முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. குறும்பொறை என்பதற்கு, காடு, குறிஞ்சி நிலத்தூர் சிறுமலை எனப் பொருள். இவற்றுள் சிறுமலை என்பதே நாமக்கல். குறும்பொறையில் மண் கோட்டைக் கட்டி அதிகமான் வாழ்ந்துள்ளான். குறும்பொறையை ஒட்டிக் கீழே குடிமக்கள் வாழ்ந்தனர். மலையைச் சுற்றிலும் மதில்கள் பாதுகாப்பாக இருந்தன. அம்மதில்களில் கொடிகள் விளங்கின எனப் பெரியபுராணம் கூறுகின்றது. எனவே கி.பி.5-ஆம் நூற்றாண்டு அளவில் நாமக்கல் குறும்பொறையூர் என்று வழங்கப்பட்டது உறுதியாகிறது. 


3. கி.பி.8-ஆம் நூற்றாண்டில் 

கி.பி.5-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு எட்டாம் நூற்றாண்டில் பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் படையெடுப்பு நிகழ்ந்தது. அக்காலத்தில் கொல்லிக்கூற்றம் மழகொங்கம் என்று வழங்கப்பட்டது. மழவர்களின் ஆட்சிக் கீழ் இருந்த சோழ நாட்டுப் பகுதி மழநாடு என்றும் மழவர் ஆட்சிக்குக் கீழ் இருந்த கொங்குநாட்டுப் பகுதி மழகொங்கம் என்றும் வழங்கப்பட்டது. கொல்லிமலையும், குறும்பொறையூரும் மழகொங்கத்தில் இருந்தன. அப்பொழுதும் இப்பகுதியில் அதிகமான்கள் ஆட்சியே நடைபெற்றது. எட்டாம் நூற்றாண்டில் கி.பி.765 முதல் 790 வரை ஆட்சி செய்த நெடுஞ்சடையன் பராந்தகன் தன் சீவரமங்கலச் செப்பேட்டிலும் வேள்விக்குடிச் செப்பேட்டிலும், மழகொங்கத்தில் அதிகமானொடு சேரனையும், பல்லவனையும் வென்றடிப்படுத்தியதைக் குறிப்பிட்டுள்ளான். அதனால் நாமக்கல் பகுதி அக்காலத்தில் மழகொங்கத்தில் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.


“பூவிரியும் பொழிற் சோலைக்

காவிரியைக் கடந்திட்டு

அழகமைந்த வார் சிலையின் 

மழகொங்கம் அடிப்படுத்தி”

 

என்று வேள்விக்குடிச் செப்பேட்டிலும், 


“மாயிரும் பெரும்புனல் காவிரி வடகரை 

ஆயிரவேலி அயிரூர் தன்னிலும் 

புகழி யூரிலும் திகழ்வே லதிகனை 

ஓடுபுறங் கண்டவன் ஒலியுடை மணித்தேர் 

ஆடல்வெம்மா அவையுடன் கவர்ந்தும் 

பல்லவனும் கேரளனும் ஆங்கவற்குப் பாங்காகி” 

எனப் பல்லவனையும், சேரனையும் சேர்த்து வென்றதைச் சீவரமங்கலச் செப்பேட்டிலும் பாண்டியன் குறித்துள்ளான். பாண்டியன் வெற்றிபெற்று அதிகமானை மதுரையில் சிறைவைத்தான். இருப்பினும் அதிகமானின் வீரத்தையும், ஆற்றலையும் கண்டு பாண்டிய குடும்பத்தின் பெண்ணை திருமணம் செய்து கொடுத்து அனுப்பினான் எனக் கருதலாம். பாண்டியனுடை மகள் வயிற்றில் பிறந்தவனே அதிகமான் குணசீலன் என்பவன் ஆவான். இக்குணசீலனே புகழ் பெற்ற நாமக்கல் குடைவரைகளை எடுப்பித்தவன் ஆவான். இப்பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் தீவிர வைணவன். இவன் காலத்தில் பாண்டிய நாட்டில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் தமிழ் வேதம் பாடித் திருமாலின்புகழ் பரப்பியவர். நெடுஞ்சடையன் பராந்தகன் பெரியாழ்வார் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவன். அதனால் தான் சீவரமங்கலச் செப்பேட்டில், 


“பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு 

மணி நீள்முடி நில மன்னவன்”


என்று பாராட்டப்படுகின்றான். பாண்டிய நாட்டிலும் திருமாலுக்குப் பல கோயில்களை எடுப்பித்தான். அரசன் மட்டுமின்றி அவன் கீழ் அதிகாரிகளும் திருமாலுக்குக் கோவில் எழுப்பித்துள்ளனர். மாறன் காரி, மாறன் எய்னன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். மழகொங்கத்தை வென்ற பாண்டியன், 


“பூஞ்சோலை அணிபுறவில்

காஞ்சிவாய்ப் பேரூர்புக்குத்

திருமாலுக் கமர்ந்து றையக் 

குன்றமன்ன தோர் கோயிலாக்கி” 

எனக் கோவையை அடுத்த பேரூரில் திருமாலுக்குக் குன்ற மன்னதோர் கோயில் எடுப்பித்ததைச் சீவரமங்கல செப்பேடு குறிப்பிடுகிறது. இதனால் பாண்டியன், நெடுஞ்சடையன் பராந்தகன் திருமாலின் தீவிர அடியவனாக விளங்கியது தெளிவாகிறது. பாண்டிய குலத்து மகள் வயிற்றுப் பேரனாகிய அதிகமான் குணசீலனும் தன் தாய்வழி பாட்டனைப் போல வைணவ ஈடுபாடு கொண்டவனாக இருந்துள்ளான். அதனால் தான் "அதியேந்திர விஷ்ணுக் கிரகம்” என்றப் பெயரில் நரசிங்க பெருமாளுக்கும், பள்ளி கொண்ட பெருமாளாகிய ரங்கநாதருக்கும் குடைவரைக் கோயில்கள் எடுத்துப் பெருமைப்பட்டான் எனலாம். பாண்டியர்கள் சந்திர குலத்தினர் என்பதற்குத் திருவரங்கத்தில் உள்ள பாண்டியர் கல்வெட்டே சான்றாகும்.


“சமஸ்த ஜகதாதார சோமகுல திலக 

மதுராபுரி மாதவ”


என்பது கல்வெட்டு வாசகம். சோமகுல திலகன் என்பதால் பாண்டியர்கள் சந்திர குலத்திற்குத் திலகம் போன்றவர்கள் என்பது விளங்கும். உலகம் போற்றும் இக்குடைவரைகள் கலை வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை ஆகும். பல்லவர்காலக் கலைவடிவைக் கொண்டிருந்தாலும் பாண்டியர் தொடர்பால் உருவாக்கப்பட்டதே இக்குடைவரைகள்.


4. கி.பி.10-ஆம் நூற்றாண்டில் 

கி.பி.10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாமக்கல் சோழர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தது. ஆதித்த சோழன், முதற்பராந்தகன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், இராசராசன், இராஜேந்திரன் ஆகிய பேரரசர்களின் கல்வெட்டுக்கள் இப்பகுதியில் கிடைப்பதால் சோழருடைய ஆட்சி இப்பகுதியில் நிலைத்திருந்தது எனலாம். இன்று நாமக்கல் என்று வழங்கப்படும் பெயர் சோழர் காலத்தில் திரு ஆரைக்கல் என்று வழங்கப்பட்டதை கல்வெட்டு வாயிலாக அறியலாம். ஆரைக்கல் என்பதற்கு மதிலால் சூழப்பட்ட கல் என்பது பொருள். ஆரை-மதில். ஆரைக்கல் என்பது காலப்போக்கில் ராரைக்கல் > ராரிக்கல் > ராமக்கல் > நாமக்கல் என்று மாறியுள்ளது. 


கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரை ஆரைக்கல் என்றே வழங்கிவந்துள்ளது. பிற்காலத்தில் நாமக்கல் ஆகி அதற்கான தலபுராணங்கள் உருவாகி மலையில் நாமம் சாத்தப்பட்டது. சோழர்காலத்தில் வளநாடு, மண்டலம், கூற்றம், நாடு என்ற பிரிவுகள் உருவாகின. அதில் வடகரை “இராசாச்சிரைய வளநாட்டு வல்லவரையர் நாட்டு” என்ற பிரிவிலே நாமக்கல் வந்தது. பிற்காலச் சோழர் காலத்தில் “கொங்கான வீரசோழ மண்டலத்து” என்ற பிரிவிலும், “நாடாழ்வார் நாடு” என்ற பிரிவிலும் அடங்கியது. சோழர் காலத்தில் பல சதுர்வேதி மங்கலங்கள் உருவாயின. நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர்களுக்கு இறையிலியாக வளமான ஊர்கள் கொடுக்கப்பட்டது. கூலிப்பட்டி, பொம்மசமுத்திரம், மணப்பள்ளி, நன்செய் இடையாறு, பில்லூர், குன்னமலை, கதிராநல்லூர், பாச்சல், கல்யாணி, ஏழூர் ஆகிய ஊர்கள் சோழர் ஆட்சிக் காலத்தில் சிறந்து விளங்கின. தூசியூர் சோழர் காலத்தில் மிகச்சிறந்த வணிக நகரமாக விளங்கியது. 


5. கி.பி.13-ஆம் நூற்றண்டில் 

சோழர் ஆட்சிக்குப்பின் கி.பி.13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் செல்வாக்கு வளர்ந்தது. சடையவர்மன் சுந்தரபாண்டியன், இராசகேசரி, வீரபாண்டியன் காலக்கல்வெட்டுகள் நாமக்கல்லிலும், சுற்றுப்பகுதிகளிலும் கிடைத்துள்ளன. பாண்டியர்காலத்திலும் பல சதுர்வேதி மங்கலங்கள் உருவாயின. நாமக்கல், “வடகொங்கு ஏழூர்” நாட்டைச் சேர்ந்ததாக குறிப்படப்படுகின்றது. மலைமேல் கோட்டையில் உள்ள திருமால் கோவில், சுந்தரபாண்டியன் கல்வெட்டில் அருளாள விண்ணகரான எதிரிலிப் பெருமாள் என்று குறிப்பிடப்படுகின்றது. இக்கோவிலுக்கு நாமக்கல் பகுதியில் உள்ள 11 ஊர்களில் 11 காணி நிலம் கொடுக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இக்காலத்தில் கொங்கு 24 நாடு என்ற நாட்டுப்பிரிவும் வழக்கில் வந்தது. 


6. மதுரை நாயக்கர் ஆட்சியில் 

பாண்டியர் காலத்திற்குப்பின் விஜயநகர, மதுரைநாயக்கர் ஆட்சியில் நாமக்கல் வந்தது. மதுரை எழுபத்திரண்டு பாளையக்காரர்களில் சேந்தமங்கலம் இராமச்சந்திரநாயக்கர் மரபினரும் அடங்குவர். அவர் காலத்தில் நாமக்கல், பரமத்தி ஆகிய இடங்களில் கோட்டைகள் கட்டப்பட்டன. முற்காலத்தில் மலைமேல் மண்ணினால் கோட்டை கட்டப்பட்டிருந்தது. காலப்போக்கில் அவைகள் அழிவுற்றன. அதனால் பிற்காலத்தில் கற்களினால் கோட்டைகள் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டன. தொடர்ந்து வந்த மைசூர், ஆட்சியாளர்களும், ஆங்கிலேயர்களும் கோட்டையைப் பராமரித்து வந்தனர். 


பரமத்தி கோட்டைத் தலைவனாக இருந்த இளையா நாயக்கன், இராமச்சந்திர நாயக்கன் சார்பில் இராமப்பையனுடன் சேர்ந்து சேதுபதியோடு போரிட்டான் என்பதை இராமப்பையன் அம்மானை குறிப்பிடுகிறது. இக்காலத்தில் நரசிங்கப் பெருமாள் கோயில் பல மண்டபங்களும், நாமகிரித் தாயார் சன்னதியும் கட்டப்பட்டன. தாரமங்கலம் கட்டிமுதலிகளின் திருப்பணியும், நரசிங்கப் பெருமாள் கோவிலில் நடந்துள்ளது. பெருமாள் சன்னதியின் கீழ் உள்ள பெரிய மண்டபம் கட்டிமுதலிகளின் திருப்பணி ஆகும். கட்டிமுதலிகளின் சின்னமான வாடாமாலை, வண்ணத்தடுக்கு முதலியவை மண்டபத்தின் மேல் விதானத்தில் உள்ளது. மலையின் மேற்கில் கட்டிமுதலித் தெரு என்ற பெயரில் ஒரு தெரு இன்றளவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


நாமக்கல் குடைவரைகளைத் தவிர குறிப்பிடத்தக்க ஒன்று நாமக்கல் ஆஞ்சநேயர் ஆகும். நரசிங்கப் பெருமாளின் சன்னதியின் நேர் எதிரில் உயர்ந்த நிலையில் பெருமானைக் கைகூப்பி சேவித்து உள்ள காட்சி உள்ளத்தை உருக்குவதாகும். நாமக்கல்லுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் உள்ளது. எல்லா நாட்களும் திருவிழாதான் என்றபடி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இவ்வாஞ்சநேயர் 18-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோற்றுவிக்கப்பட்டது. மானத்தி பெரிய ராசாக்கவுண்டர் (மானத்தி ஜமீன்தார்) ஆஞ்சநேயருக்கு நந்தவனம் அமைத்து கொடுத்ததைப் பற்றி ஒரு கல்வெட்டுக் குறிப்பு உண்டு.

 

கி.பி. 1874-ஆம் ஆண்டில் முத்துகாப்பட்டி ஜமீன்தாரினியாக இருந்த முத்தியாலம்பாள் நரசிங்கப் பெருமாள் கோவில் கொடிக் கம்பத்திற்குப் பொன்தகடு வேய்ந்துள்ளார். அக்காலத்தில் அதன் மதிப்பு 12,000/- ரூபாய் ஆகும். இவ்வம்மையாருடைய கணவர் பொலமரெட்டியார் ஆவார். 


7. ஆங்கிலேயர் ஆட்சியில் 

சில காலம் மைசூர் ஆட்சி நடைபெற்றது. ஊர்பெயர்கள் கன்னட ஒலிப்பில் மாற்றம் செய்யப்பட்டன. கி.பி.1786-ல் கர்னல்-உட் அவர்களின் நடவடிக்கையினால் நாமக்கல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தது. அதே ஆண்டில் ஐதர்அலி நாமக்கல்லை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டார். மூன்றாம் மைசூர்ப் போரின் விளைவால் சேலம் கோவைப் பகுதிகள் நிரந்தரமாக ஆங்கிலேயர் கீழ் வந்தது. நாமக்கல் சேலம் மாவட்டத்தில் ஒரு வட்ட தலைநகரமாக விளங்கியது. கி.பி. 1910-ல் நாமக்கல் வட்டம் திருச்சி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் நாமக்கல் சேலம் மாவட்டத்திற்கு வந்தது. இதன் இடையில் தாத்தையங்கார்பேட்டை, காட்டுப்புத்தூர் ஆகிய பிர்காக்கள் திருச்சியோடு சேர்க்கப்பட்டது. அக்காலத்தில் ஈரோடு, நாமக்கல், அரியலூர் வழியில் புகைவண்டித் தொடர் அமைக்க திட்டமிடப்பட்டு என்ன காரணத்தினாலோ திட்டம் கைவிடப்பட்டது. 


8. விடுதலைப் போராட்டத்தில் 

விடுதலை போராட்டத்திலும் நாமக்கல் முன்னிலையில் விளங்கியது. “கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்திற்குச் சென்ற அறப்போர் தியாகிகளுக்கு வேதகீதமாக போராட்டப்பண் பாடிக்கொடுத்த கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவருடைய நினைவாக சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை எனப் பெயரிட்டு அரசு சிறப்பித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் நாமக்கல் பகுதியில் 42 பேரும், இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் 165 பேரும் முனைந்து சிறை சென்றனர். 14 பிப்ரவரி1934-ல் மகாத்மா காந்தி முதன் முதலில் நாமக்கல்லுக்கு வந்தார். மிட்டாதார் வெங்கடாசலம் செட்டியாரும், வக்கீல் நாகராஜ அய்யங்காரும் மற்றும் பலரும் காந்தியடிகளை வரவேற்றனர். கமலாலயக் குளக்கரையில் கூட்டம் நடைபெற்றது.


"இந்தியாவிலேயே இயற்கை அழகு நிறைந்த இடங்களில் ஒன்றிற்கு என்னை அழைத்து வந்து இருக்கின்றீர்கள். இத்தகைய கூட்டங்கள் நடத்துவதற்கு இந்த இடம் மிகவும் ஏற்றது.” என்று காந்தியடிகள் மனமுவந்து கூறினார். 


நன்றி !


- வெ.இரா.துரைசாமி - நாமகிரிப்பேட்டை

தானிய கிடங்கு திறப்பு விழா சிறப்பு மலரில் வெளிவந்த கட்டுரை




செவ்வாய், 24 டிசம்பர், 2024

நாமகிரிப்பேட்டை சில வரலாற்றுக் குறிப்புகள்

 

நாமகிரிப்பேட்டை என்று நினைக்கும் போதே காதில் நாதஸ்வரத்தின் இனிய ஒலி கேட்கிறது. இந்திய துணை கண்டத்தையே தனது இசை வெள்ளத்தில் மிதக்க விட்ட பெருமைக்குரிய கிருஷ்ணன் பிறந்த ஊர். உலக அளவில் நாமகிரிப்பேட்டைக்கு முகவரி தந்தவர் அவர். மஞ்சள், மரவள்ளி கிழங்கு உற்பத்தி, சேகோ பேக்டரிகள், அப்பளம் உற்பத்தி என பல்வேறு முகங்களுடன் இன்றைய நாமகிரிப்பேட்டையை அனைவருக்கும் தெரியும்.

நாமகிரிப்பேட்டை பற்றிய பழமையாக தகவல்களை தெரிந்து கொள்ள வரலாற்று ஏடுகளை பார்ப்போம். ஏறக்குறைய கி.பி.17ம் நூற்றாண்டில் சேலம், நாமக்கல் பகுதிகளை மைசூர் உடையார் அரச மரபினர் ஆட்சி புரிந்து வந்தனர். அப்போது நாமகிரிப்பேட்டையும் 1673 முதல் 1704 வரை மைசூர் உடையார்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அவ்வப்போது ஆட்சி மாறினாலும் நீண்ட காலம் மைசூர் ஆளுகையே இருந்தது. அந்தந்த அரசுகளின் அரசப்பிரதிநிதிகள் குன்றத்தூரில் (தற்போதைய சங்ககிரி) இருந்து கொங்கு நாட்டுப் பகுதிகளை கண்காணித்து வந்தனர். 


17ம் நூற்றாண்டில் கிழக்கு திசையில் இருந்து வீர சைவ ஜங்கமர் மரபைச் சேர்ந்த வணிகர் ஒருவர் தனது குழுக்களுடன் எருதுகளில் வணிக பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். கொல்லிமலைத் தொடரும், போதமலைத் தொடரும் இணையும் இடமான மெட்டாலா கணவாய் அப்போது ஆயில்பட்டி கணவாய் என அழைக்கப்பட்டது. கணவாய் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் இருப்பார்கள் என்ற பயத்தால், இறங்கும் முன்பு மேட்டில் உள்ள ஆலமரத்தில் (தற்போதைய மெட்டாலா) அனைவரும் ஓய்வெடுத்துவிட்டு கூட்டமாகத்தான் கணவாயை கடப்பார்கள். அப்படி ஜங்கமர் வணிகர்கள் கடந்து வந்து கொண்டிருந்தனர். கணவாய்க்கு கீழே அரசு சார்பில் சுங்க சாவடி அமைக் கப்பட்டிருந்தது. வணிக பொருட்களுக்கு சுங்க வரி வசூலிப்பது வழக்கம். சுங்க சாவடி காவலர்கள் அதிகமாக வரி கேட்டதால், வீர சைவ ஜங்கமர் குழு தலைவர் நாமக்கல்லில் இருந்த அதிகாரியிடம் முறையிட முடிவு செய்தார்.


குழுவில் இருந்த சிலருடன் நாமக்கல் புறப்பட்டார். அங்கு சென்ற போது, சுங்க வரி வசூல் தொடர்பான அதிகாரி குன்றத்தூரில் (சங்ககிரி) இருப்பது தெரிந்தது. அங்கிருந்து கிளம்பும் முன்பு நரசிம்மர், நாமகிரி தாயார், ஆஞ்சநேயர் ஆகியோரை வழிபட்டனர். செல்லும் காரியம் வெற்றி பெற்றால் நாமகிரி தாயார் பெயரில் நிரந்தரமாக ஏதாவது செய்வது என உறுதி எடுத்துக் கொண்டனர்.


குன்றத்தூரில் இருந்த அதிகாரி, வீர சைவ ஜங்கமர் குழு தலைவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். மேலும், சுங்க வரி இல்லாமல் சுற்றுவட்டார பகுதியில் வணிகம் செய்து கொள்ளலாம் என்றும் அனுமதியளித்தார். அதற்கான உத்தரவையும் வழங்கினார். மகிழ்ச்சியுடன் வந்த தலைவர் தனது குழுக்களுடன் வரி கட்டாமல் இன்றைய நாமகிரிப்பேட்டை எல்லைக்குள் நுழைந்தார். வனப்பகுதியை ஒட்டி சில இடங்களில் மட்டுமே உழவு தொழில் இருந்தது. ஊரின் தெற்கு பகுதியில் நீரோடையும் மேட் டுப்பகுதியில் சில குடியிருப்புகளும் மட்டுமே இருந்தன. நீர்வள ஆதாரத்துடன் இருந்த அந்தப் பகுதியில் வீர சைவர் ஜங்கமர் மரபினர் தங்கிக் கொள்ள முடிவு செய்தனர்.


அரசாட்சி செய்யும் அதிகாரிகள் தங்கும் பகுதி கோட்டை என்றும், குடிமக்களுடன் வணிகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு பேட்டை என்றும் அழைப்பது அப்போதைய வழக்கம். வணிகர்கள் தங்கிய இந்த பகுதிக்கு நாமகிரி தாயார் நினைவாக நாமகிரிப்பேட்டை என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும் 

சுங்கம் வசூல் செய்த பகுதியில் ஆஞ்சநேயருக்கு குடவரை கோயிலும் அமைத்தனர். வீர சைவ ஜங்கமர் மரபினர் நாமகிரிப்பேட்டை வழியாக செல்லும் போது தங்குவதற்கு ஈசானிய மடம் என்ற பெயரில் மடம் ஒன்றை ஏற்படுத்தினர், அதற்கு அருகிலேயே குருமார்களை அடக்கம் செய்யவும் இடம் ஒதுக்கப்பட்டது. விரைவில் தங்களது விருப்ப தெய்வமான வீரபத்திர சுவாமிக்கு கோயிலும் கட்டினர். சிவராத்திரியன்று வீரபத்திர சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடப்பது உண்டு. தென்னிந்தியாவிலேயே ஜங்கம சமுதாயத்தின் குல தெய்வமான வீரபத்திரர் சுவாமிக்கு நாமகிரிப்பேட்டையில்தான் கோயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


வீரபத்திர சுவாமி, மடம் ஆகியவற்றுக்கு இடம் வழங்கிய சீராப்பள்ளி ஜமீனை பார்க்க மரியாதை நிமித்தமாக வருடம் ஒரு முறை குருமார்கள் சீராப்பள்ளி செல்வார்கள். அங்கு ஜமீன் அவர்களுக்கு பாத பூஜை செய்து தேவையான உதவிகளை செய்வார். ஜமீன் முறை ஒழிக்கப்பட்ட போது, இந்த பழக்கமும் மறந்து போனது. 


வீர சைவ ஜங்கமர் மக்களின் தெய்வமாகிய வீரபத்திரர் மீது ஒரு சதகம் (100 பாடல்கள்) பாடப்பட்டுள்ளது. பாடலை வேப்பிலைப்பட்டி வையாபுரி அய்யர் மகன் உபாத்தியாயர் பாலுசாமி அய்யர் இயற்றியுள்ளார்.  இவர் வல்லான மகாராஜ என்ற நாடகத்தையும் இயற்றி, 1888ல் அரங்கேற்றமும் செய்துள்ளார். வீரபத்திரர் சதகத்தில் ஒவ்வொரு பாடலும் 'நாமகிரி வீர பத்திர மகா தேவ தேவனே!" என்று முடிவடையும், இதில் ஒரு பாடலில் நாமகிரிப்பேட்டை பற்றி சிறப்பையும் குறிப்பிட்டுள் ளனர். ஓலைச்சுவடியாக இருந்த இந்த பாடல்கள் பிறகுதான் அச்சு வடிவில் வந்தது. 


நாமகிரிப்பேட்டையில் தொடக்கத்தில் கடைவீதி, நடுவீதி ஆகியவை மட்டுமே இருந்துள்ளன, கடைவீதியில் வணிகமும், நடுவீதியில் குடியிருப்புகளும் இருந்தன. பிறகுதான் ஆத்தூர் மெயின் ரோடு உருவானது. வடக்கே கோரையாறு, தெற்கே பெரியாறு என்று இரண்டு ஆறுகளுக்கு இடையே நாமகிரிப்பேட்டை பகுதி மிகவும் செழிப்பாக இருந்துள்ளது.


1880ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் எழுதப்பட்ட மேனுவல் புத்தகத்தில் இதற்கான குறிப்புகள் உள்ளன. கொல்லிமலையில் இருந்து வெட்டி எடுத்துவரப்பட்ட இரும்பு தாது மண், நாமகிரிப்பேட்டையில் தரம் பிரித்து காய்ச்சி பட்டறை மேடு என்ற பகுதியில் ஆயுதங்களாகவும், உழவு கருவிகளாகவும் தயாரிக்கப்பட்டது. அதனால்தான் நாமக்கல் ரோடு பகுதியில் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு வரை இரும்பு கழிவு மண் கொட்டப்பட்டிருந்தது. இதனை தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் அறிவார்கள். அந்த காலத்திலேயே பஞ்சாயத்து, காவல் 

நிலையமும் வெள்ளிக்கிழமையில் வாரச்சந்தையும் இருந்துள்ளன. ஆரிய வைஸ்ய இன மக்கள் அதிகமாக வாழ்ந்துள்ளனர். ஒரு தொடக்கப்பள்ளி, 24 மாணவர்கள் ஒரு ஆசிரியருடன் இயங்கி வந்துள்ளது குறிப்பிடப்பட் டுள்ளது.


பின்னர், உழவு தொழில் செய்து வந்த பிள்ளை, சேர்வை இன மக்கள் நாமகிரிப்பேட்டை நகரில் நடுவீதியில் குடி புகுந்தனர். அதன் பிறகு கடைவீதியில் பிரசித்தி பெற்ற நடுவீதி மாரியம்மன் கோயில் கட்டப் பட்டது. கோயிலுக்கான நிலத்தை 1919ம் ஆண்டு பாவாடை பிள்ளை, சபாபதி சேர்வை, கோபால் பிள்ளை, அங்கமுத்து பிள்ளை, கோவிந்தம் பிள்ளை, சின்னசாமி பிள்ளை ஆகியோர் வாங்கியுள்ளனர். 1934ம் ஆண்டு தேர் செய்யப்பட்டு மாரியம்மன் திருவீதி வலம் வந்தது. 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இன்று அனைத்து இன மக்களும் மாரியம்மன் கோயில் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சித்திரை மாதம் இறுதி வாரத்தில் தேர் திருவிழாவும் அக்னி குண்டம் இறங்கும் விழாவும் நடக்கும். இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 18 பட்டிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்வர்.



- வெ.இரா.துரைசாமி, ஆசிரியர் ஓய்வு.


நாமகிரிப்பேட்டை சிறப்பு மலர்

தமிழ்முரசு நாளிதழுடன் இலவச இணைப்பு

6 சனவரி 2014, சேலம்


புதன், 1 மே, 2024

நன்மனைவி!

எனக்காக நன்மனைவி வந்து சேர்வாள்
என்னிதயத் தினைப்புரிந்து வாழ்க்கை வாழத்
தனக்காக என்வழியைப் புரிந்தே கொண்டுத்
தன்னிதயந் தனையெனக்குப் பரிசாய் ஈவாள்!
மனக்கோட்ட மில்லாமல் என்னைச் சுற்றி
மங்கையவ ளகங்குளிர, முறுவல் சிந்தி
இணக்கமுடன் செவ்வாயில் மொழிகள் பேசி
ஏற்றிடுவாள் எந்தனையும் கணவன் என்றே!

எத்தனையோ விதங்களினால் துன்பம் சூழ்ந்தே
இருந்திட்ட போதிலுமென் உள்ளம் தன்னில்
கொத்துமலர் நாற்றமென இன்பம் கூட்டிக்
கொடுத்திடுவாள்! வாழ்க்கையிலே துணையே யாவாள்!
வித்தகனாம் நான்தவறும் சமயத் தெல்லாம்
விலக்கிடுவாள் பிழைகளையே! நன்மை சேர்ப்பாள்!
இத்தரையில் விருந்தோம்பும் பண்புக் கென்றும்
என்மனைவி மேலாவாள்! தாயைப் போல்வாள்!

கற்றாரைத் தான்மதித்துப் பணிவாய் என்றும்
கற்றிடுவாள் நல்லறங்கள்! அறிவின் மிக்க
உற்றாரைப் போற்றிடுவாள்! ஒழுக்கம் பொங்க
உலகெங்கும் புகழுரைக்கும் கற்பின் நிற்பாள்!
சற்றேனும் முகஞ்சுளித்துக் காண்பேன் இல்லை
தையலவள் எந்தனையே குழந்தை ஆக்கிப்
பெற்றவளைப் போலமிகப் பரிவாய் என்றும்
பேணிடுவாள் பாசமுடன் துயரம் தீர்ப்பாள்!

இல்லத்தின் திருமகளாய்! இதயக் கோவில்
ஏற்றுகின்ற பேரொளியாய்! மணியாய்! முத்தாய்!
சொல்லத்தான் முடியாத உயர்வாய்! என்னைச்
சுகங்காணச் செய்திடுவாள்! மற்றும்! ஆ! ஆ!
மெல்லத்தான் என்நாக்குச் சுவையைக் கண்டே
மேவுபல உண்டிகளைச் செய்தே வைத்து
நல்லத்தான் என்றிசைப்பாள்! இன்பம் சேர்ப்பாள்!
நற்றமிழால் நான்பரவும் தெய்வம் ஆவாள்!

குலமகளாய்த் தமிழகத்துப் பெண்ணின் பண்பைக்
குற்றமறக் கற்றவளாய்! பொறுமைக் கென்றும்
நிலமகளாய், வானுறையும் மதியின் தண்மை
நிலைத்திருக்கும் பெண்மகளாய்! அறிவில் பூத்தக்
கலைமகளாய் என்வளத்தின் மாசை முற்றும்
களைமகளாய் விளங்கிடுவாய்! அவளே பண்பின்
நலமகளாம் என்மனைவி உயிரிற் கூடி
நான்வாழ வழிசெய்யும் அமைச்சன் ஆமே!

மஞ்சளினைத் தான்பூசித் திலகம் மின்ன
மங்கையவள் நல்லாடை இனிதின் பூண்டு
செஞ்சாந்துச் சீரடியில் அழகே செய்ய
செவ்விதழில் தேனூற கண்கள் தாமும்
துஞ்சாது எனைக்காக்க! புருவ வில்லில்
துரிதமுடன் விழிக்கணையை ஏற்றிக் கொண்டு
பஞ்சணையில் தழுவிடவே! வருவாள் எந்தன்
பண்பான மனைவியவள்! தெய்வம் தானே!

- கொல்லிக்கிழான் (புலவர் வெ.இரா.துரைசாமி )

(திருமணத்திற்கு முன்னர் தனக்கு வரப்போகும் மனைவி எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்று எழுதிய கவிதை)


திங்கள், 1 ஜனவரி, 2024

புத்தாண்டே வருக!

எங்கும் பசுமை! இதழ்களில் பனித்துளி!

    பொங்கும் குளிரால் பொழுது புலர்ந்திட

ஈரா யிரத்துப் பதினான் காண்டே!

    சீராய் வந்தனை திருவடி வணக்கம்!

உலகம் உவப்ப உந்தன் அருளே

    நிலவுக! யாண்டும் நீணிலம் மீதில்

அன்பும் வளமும் அமைதியும் மக்கள்

    இன்புற் றிருக்க ஏற்றம் தருவாய்!

வறுமையும் பிணியும் வன்முறைக் கொடுமையும்

    சிறுமைப் படுத்தும் சாதி மதங்களின்

பிணக்கு ஒழிந்து பேருலகம் எல்லாம்

    இணக்கம் வளர இனிதாய் வருவாய்!

புத்தாண் டென்னும் பொன்மகளே!

    இத்தரை உன்னால் ஏற்றம் பெறுகவே!


- கொல்லிக்கிழான் (புலவர் வெ.இரா.துரைசாமி )

(2014 புத்தாண்டிற்காக எழுதப்பட்டது)

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

தீரன் சின்னமலை கும்மி நூல் வெளியீடு

கலியுகம் 5124 ஸ்ரீ சோபகிருது வருடம் புரட்டாசி 27 (அக்டோபர் 14, 2023) அன்று, வையப்பமலை தீரன் சின்னமலை வள்ளிக்கும்மியின் முதன் நிகழ்ச்சியை முன்னிட்டு தீரன் சின்னமலை கும்மி என்ற சிறுநூல் வெளியிடப்பட்டது.

பாலமேடு திரு ம.இராஜா மற்றும் திரு து.சீனிவாசன் அவர்கள் இணைந்து வெவ்வேறு நூல்களில் இருந்து கும்மிப் பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

நூலின் முன்னுரை:

வணக்கம். தீரன் சின்னமலை கும்மி என்ற இந்த சிறு நூல் பத்து சிறு பாடல்கள் கொண்ட தொகுப்பு. சின்னமலை கும்மி புலவர் குழந்தை மற்றும் கா. அரங்கசாமி தொகுத்தது. மரபாளன் உற்பத்திக்கும்மி புலவர் இராசு அவர்கள் வெளியிட்டது. இது வேளாளர் புராணத்தின் சிறு சுருக்கம். அர்த்தநாரீசுரர் கும்மி திருச்செங்கோடு அர்த்தநாரீசுரர் மீது பாடப்பட்டது. குமரமங்கலம் பாண்டீசர் மீது பாடப்பட்டது பாண்டீசர்கும்மி. கம்பர் வாழி கொங்கு வேளாளர் திருமணங்களிலே புலவரால் பாடப்படும். குலம் சம்பந்தப்பட்ட பாடல்கள், 96 கீர்த்தி தனி ஓலைச்சுவடியில் இருந்து எடுக்கப்பட்டது. மற்றது, கொடுமணல் இலக்கியம் மற்றும் அழகுமலை குறவஞ்சி இலக்கியத்தில் இருந்து தொகுக்கப்பட்டது. கொங்கு வேளாளர் திருமணங்களில் சீர் கேட்டல் என்ற நிகழ்ச்சியின் கேட்கப்படும் சீர்களின் தொகுப்பாக ஒரு பாடல், கொங்கு நாட்டு தாலாட்டு பாடல் ஆகியவைகளின் தொகுப்பாக இந்த சிறு நூல் அமைந்துள்ளது. வைப்பமலை தீரன் சின்னமலை வள்ளிக்கும்மியின் முதன் நிகழ்ச்சியின் நினைவாக இந்த நூல் வெளியிடப்படுகிறது. அமரர் புலவர்இராசு அவர்களுக்கும் அமரர் நாமகிரிபேட்டை துரைசாமி அவர்களுக்கும். PeeVee கிராபிக்ஸ்க்கும் நன்றி. 


அன்புடன் 

ம.ராஜா 

து.சீனிவாசன்






காவிரிப் புனல்...

காவிரிப் புனலே! காவிரிப் புனலே!
    மேவிடும் பெருக்கில் தாவிடத் துள்ளிக்
குடவரை மருங்கிற் குறுமுனி யருளால் 
    தடவரைப் பிளந்து ததும்பிடு நன்னீர்க்
காவிரிப் புனலே! காவிரிப் புனலே!

வரைபடு நற்பொருள் வாரிச் சுமந்தும்
    தரைப்பட எண்ணித் திரைபடர்ந் தோடித்
தடைப்படு பொருளை உடைப்பினிற் சாடி
    மடைப்புறம் நீங்கிக் கடைப்புறங் காட்டி 
உறுபுனற் பெருக்கின் ஓதை விளத்துத்
    துறுகற் றழுவித் தொடுமணற் சுரந்தும் 
கருங்கற் பாறை மருங்கிற் சாடி
    அருங்கலைப் பளிங்காய் ஆக்கிக் கன்னியர்
நெடும்புனற் றிளைக்கும் நீணறுந் துறையொடு
    மடுவிற் புகுந்து மஞ்சள் குழைத்தும்
இகுகரை மருங்கை உகும்படிச் செய்தும்
    வெகுவிரை வோடு வியன்மரக் காவில்
திரைநீர்க் கரத்தால் விரைமலர்க் கொய்தும்
    நரைசால் விளங்கும் நுரைசால் கொண்டு
வந்தனை யன்றோ? வந்தனை யன்றோ? 
    வெந்துயர் நீக்கிட வந்தனை யன்றோ?

சான்றோர் மனம்போற் சலனம் இன்றி
    ஆன்றவுன் பெருக்கை அடக்கியும் செல்குவை!
கல்லாப் புல்லர் கற்றன மென்று 
    சொல்லா லொலித்துச் சுகம் பெறல் போலக்
கல்மிசை இவர்ந்துப் புல்மிசைத் தாவி
    ஒல்லென் றொலித்தே ஓடினும் ஓடுவை!

அன்றியும்; 

        ஏருழவர் போரடித்துப் 
        பார்புரக்கச் சீர்செய்தல் 
        ஞாலத்தில் நீயருளும் 
        சீலத்தா லன்றோகாண்!

அதனால்; 

        உயிரூட்டும் இறையென்கோ?
        பயிரோம்பும் தாயென்கோ? 
        வானவரின் அமுதென்கோ?
        கானவரின் தருவென்கோ?
        அயராமல் நீநடந்தும் 
        துயரின்றிக் கீட்டிசையில்
        கடற்காதல்நனி விழைந்து 
        இடர்ப்பாடு பல்கொண்டும்

ஓடுவை! ஓடுவை! உன்னருங் கொண்கன் 
    வாடுவ னென்று வையகம் முழுதும் 
ஆர்த்துச் செல்லும் அழகைப் 
    பார்த்துத் திளைத்தேன் பைங்கூழ்ப் பரப்பிலே" 


“காவிரிக்கும் காவிரியே! கன்னடத்தார் நாட்டினின்று
    தாவிக் குதித்துவரும் தாயேநீ! - நாவினிக்க
பாடும் புகழ்பெற்றாய்! பைந்தமிழர் வாழ்வோங்க 
    காடும் மலைகடந்தாய் காண்!”


“பொங்கும் புனலாலே பொன்கொழிக்கும் அற்புதத்தை 
    எங்கும் புவியகத்தே யான்காணேன் - நங்கலிதீர்! 
நீர்ப்பாய்ச்சி நல்லுழவர் நீளுலகில் வெம்பசியை
    ஏர்ப்பாய்ச்சிச் சாடிடுவா ரீங்கு!”


“நல்லார் பெறும்பொருளை நாட்டுக்குத் தந்துபிறர்
    எல்லோரும் போற்ற இருப்பதுபோல் - தொல்லுலகில்
கொங்கலருஞ் சோலைக் குடகிற் பெறுநீரை
    எங்கட்குத் தந்துயர்ந்தா யின்று!”

- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)


திங்கள், 1 மே, 2023

உழவைப் பாடுவீர்…

மேதினி போற்றும் மே தின வாழ்த்துகள்!

ஏடெடுத்துக் கவிபாடிப் புகழைச் சேர்க்கும்

    இனியதமிழ்ப் பாவலரே! பெரியீர்! இந்த

நாடிருக்கும் நிலையறிந்து வறுமை போக்கி 

    நன்மைபல செய்திடவும், ஆக்கம் சேர்ந்து 

வீடங்கும் செல்வமணம் கமழ்ந்தே நிற்க 

    வீதியெங்கும் பொற்குவியல் மண்டிப் போகப்

பீடெடுத்துப் பாடிடுவீர்! உழைப்பை மக்கள்

    பேணிடவே பாடிடுவீர்! அதுதான் வேண்டும்.


பொங்கிவரும் பெருநிலவைத் தென்றல் தன்னைப் 

    பூவையரை, வானத்தை முகில்கள் தன்னை 

மங்காத பழம்பெருமை காதல் வாழ்வை 

    மலையெழிலைப் பூந்தளிரை அருவி மற்றும் 

இங்குள்ள பல்பொருளை இயற்கை தன்னை 

    எத்தனயோ விதமாகச் சுவையாய் நீங்கள் 

தங்கநிகர்த் தமிழாலே பாடி விட்டீர்! 

    சற்றேதான் உழவினையும் பாடு வீரே! 


வள்ளுவனும் உழவுக்குச் சிறப்புத் தந்தே 

    வையகத்தின் அச்சாணி என்றான் மற்றும் 

உள்ளுதொறும் சுவையூட்டும் சங்க நூல்கள் 

    உரைத்தனவே ஏருழவைப் புகழ்ந்தே பின்னைத் 

தெள்ளுதமிழ்ப் புலவனவன் கம்பன் தோன்றிச் 

    செம்மையுறும் ஏரெழுப தியற்றித் தந்தான்

உள்ளீரோ? அதற்குப்பின் உழவைப் பற்றி

    உரைத்தவர்யார்? சிறப்பாக இல்ல அன்றோ?.


“நிலமென்னும் நல்லாளைக் கலப்பை கொண்டு 

    நித்தமும் நாம் உழுதிடுதல் பாவம்” என்றே 

குலநீதி பேசுகின்ற வேத வாக்கிற் 

    குளிர்காய்ந்து வாழ்ந்திருந்தோம். உண்மை கண்டே 

பலனறிந்து ஏர்த்தொழிலைப் போற்றினோமா? 

    பயிர்த்தொழிலைப் பொங்கலன்று புகழ்ந்தே பேசிச் 

சலனமின்றிப் பிறநாளில் இருந்தே விட்டோம். 

    சாத்திரத்தின் மோகத்தில் ஆழ்ந்தே போனோம்.


ஆலயங்கள் ஒவ்வொன்றின் சிறப்பைப் பற்றி 

    ஆயிரத்தின் மேலாகப் பாக்கள் செய்து

கோலமுறும் தமிழாலே தலபு ராணங்கள் 

    குவித்து விட்டோம். ஆனாலும் கடவுள் தந்த

சீலமிகு நல்லுழவன் தன்னைப் பாடிச்

    சேவித்துக் கொண்டோமா? இறைவன் தன்னை

ஆலயத்தில் காண்பதற்குத் துடிக்கின்றோமே 

    அவ்வுருவை வயல்வெளியில் உழைக்கக் காணீர்!


- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)