உழவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உழவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 மே, 2023

உழவைப் பாடுவீர்…

மேதினி போற்றும் மே தின வாழ்த்துகள்!

ஏடெடுத்துக் கவிபாடிப் புகழைச் சேர்க்கும்

    இனியதமிழ்ப் பாவலரே! பெரியீர்! இந்த

நாடிருக்கும் நிலையறிந்து வறுமை போக்கி 

    நன்மைபல செய்திடவும், ஆக்கம் சேர்ந்து 

வீடங்கும் செல்வமணம் கமழ்ந்தே நிற்க 

    வீதியெங்கும் பொற்குவியல் மண்டிப் போகப்

பீடெடுத்துப் பாடிடுவீர்! உழைப்பை மக்கள்

    பேணிடவே பாடிடுவீர்! அதுதான் வேண்டும்.


பொங்கிவரும் பெருநிலவைத் தென்றல் தன்னைப் 

    பூவையரை, வானத்தை முகில்கள் தன்னை 

மங்காத பழம்பெருமை காதல் வாழ்வை 

    மலையெழிலைப் பூந்தளிரை அருவி மற்றும் 

இங்குள்ள பல்பொருளை இயற்கை தன்னை 

    எத்தனயோ விதமாகச் சுவையாய் நீங்கள் 

தங்கநிகர்த் தமிழாலே பாடி விட்டீர்! 

    சற்றேதான் உழவினையும் பாடு வீரே! 


வள்ளுவனும் உழவுக்குச் சிறப்புத் தந்தே 

    வையகத்தின் அச்சாணி என்றான் மற்றும் 

உள்ளுதொறும் சுவையூட்டும் சங்க நூல்கள் 

    உரைத்தனவே ஏருழவைப் புகழ்ந்தே பின்னைத் 

தெள்ளுதமிழ்ப் புலவனவன் கம்பன் தோன்றிச் 

    செம்மையுறும் ஏரெழுப தியற்றித் தந்தான்

உள்ளீரோ? அதற்குப்பின் உழவைப் பற்றி

    உரைத்தவர்யார்? சிறப்பாக இல்ல அன்றோ?.


“நிலமென்னும் நல்லாளைக் கலப்பை கொண்டு 

    நித்தமும் நாம் உழுதிடுதல் பாவம்” என்றே 

குலநீதி பேசுகின்ற வேத வாக்கிற் 

    குளிர்காய்ந்து வாழ்ந்திருந்தோம். உண்மை கண்டே 

பலனறிந்து ஏர்த்தொழிலைப் போற்றினோமா? 

    பயிர்த்தொழிலைப் பொங்கலன்று புகழ்ந்தே பேசிச் 

சலனமின்றிப் பிறநாளில் இருந்தே விட்டோம். 

    சாத்திரத்தின் மோகத்தில் ஆழ்ந்தே போனோம்.


ஆலயங்கள் ஒவ்வொன்றின் சிறப்பைப் பற்றி 

    ஆயிரத்தின் மேலாகப் பாக்கள் செய்து

கோலமுறும் தமிழாலே தலபு ராணங்கள் 

    குவித்து விட்டோம். ஆனாலும் கடவுள் தந்த

சீலமிகு நல்லுழவன் தன்னைப் பாடிச்

    சேவித்துக் கொண்டோமா? இறைவன் தன்னை

ஆலயத்தில் காண்பதற்குத் துடிக்கின்றோமே 

    அவ்வுருவை வயல்வெளியில் உழைக்கக் காணீர்!


- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)

வியாழன், 14 ஜனவரி, 2021

குவலயம் காக்கும் இறைவன்...!

நானோர் உழவன்! ஞால மருங்கில்

நற்பயிர் விளைத்திடும் உழைப்பாளி!

வானோ பிழையும் கார்முகில் கொண்டு

வாணிபம் செய்யும் வியாபாரி!

கானோ? வெளியோ? அதனைப் பற்றிக்

கவலைப் படுவதுங் கிடையாது!

ஊனோ? உயிரோ? மனிதர்க் குள்ளது

உழைப்பை நம்பி வாழ்கின்றேன்.


பள்ளி மிதித்து நூலைக் கற்றுப்

பாடங் கேட்டது கிடையாது!

துள்ளித் திரியும் இளமைப் போதில்

சோர்வைப் போக்கி ஏரென்னும்

வெள்ளிக் கோலில் நிலமாம் சுவடியில்

விளங்கக் கற்று மாந்தர்க்(கு)

அள்ளித் தந்திட உணவுப் பொருளை

அறிந்தது ஒன்றே போதாதா?


மாடி வாழ்வும் பஞ்சணை இன்பமும்

மனதிற் கொண்டது கிடையாது!

கோடிக் கணக்காய்ப் பசியாம் பிணியிற்

குமுறும் ஏழை நலங்காணத்

தேடிக் கொடுப்பேன் தக்க மருந்து!

சிந்தை மகிழ அதைவுண்டே

வாடிக் கிடப்போர் மகிழ்வைக் கண்டு

வையம் உழுதிடும் உழவன்நான்!


செல்வம் செருக்கு என்ற இவற்றைச்

சேர்ந்த இரண்டு மாடாக்கி

வல்ல உழைப்பை மேழியாம் என்று

வைத்தே உடலை நுகமாக்கிக்

கல்லும் மண்ணும் கலந்த இந்தக்

காசினி தன்னை அறிவென்னும்

நல்ல சாட்டைக் கொண்டே உழவை

நடத்திச் செல்லும் உழவன்நான்!


இரண்டு கையும் நெஞ்சத் துணிவும்

இருக்கும்போது சிலர் போலச்

சுரண்டி வாழும் எண்ணம் இல்லை

சோம்பல் என்பது துளியில்லை!

முரண்டு செய்யும் கயவரை ஏரில்

முடித்து மாடாய் ஓட்டிடவே

திரண்டு வாரீர்! வாரீர்! இந்தத்

திருநா டோங்க வழிஇதுவே!


தெய்வக் கோயிலும் கலையின் வாழ்வும்

தேசப் பண்பும் நான்சிந்தும்

மெய்யின் வியர்வை தன்னிற் புனிதம்

விளங்கக் காணீர்! நானோட்டும்

செய்யின் படைசால் தன்னிற் புரளும்

செல்வப் பெருக்கே மக்களெலாம்

உய்யும் வழிக்குத் திரண்டே வந்திடும்

உலகிற் செங்கோல் உழவன்நான்!


போரை நம்பிக் களப்பலி தந்து

புவியை ஆண்ட வேந்தருமென்

ஏரை நம்பிக் களப்பொலி கொண்டே

இருந்தா ரென்றே நானந்தச்

சீரைப் பாடி முன்னோர் சென்ற

திசையைத் தொழுது வானமெனும்

கூரைக் கடியில் வாழ்க்கை நடத்திக்

குவலயம் காக்கும் இறைவன்நான்!


- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)

"ஏர் உழவன்" ஆண்டுமலரில் வெளிவந்தது.