வியாழன், 24 டிசம்பர், 2020

மழைத் துளி!

முத்து முத்தாய் மழைத்துளிகள்

முற்றம் எங்கும் தெறித்துவிழ!

கொத்துக் கொத்தாய்ப் பூமியெங்கும்

கொட்டு கின்ற நீரமுதம்!!


பட்டுப் போன்ற மலர்களிலே

படிந்திருக் கும்தேன் துளிகள்!

சிட்டு களுக்கில் லாமல்

சிதற வைக்கும் மழைத்துளிகள்!!


மேகம் என்னும் கூரையிலே

மின்னல் இடிதான் முழங்க!

தாகம் அதைத்தீர்ப் பதற்குத்

தரைக்கு வந்த தேனமுதம்!!


பூமி எங்கும் பசுமைதனைப்

பூத்திருக் கச்செய் திடுமே!

சாமிஎன உயிர்கள் எல்லாம்

தலைவணங் கும்மழைத் துளியாம்!!


ஆறுகுளம் ஏரி மற்றும்

அணைக ளுமேநீர்ப் பெருக!

சோறு தின்ன தானியங்கள்

தோற்று விக்கும் மழைத்துளிதான்!!


குடிக்க நல்ல நீர்தருமே!

குளிப்பதற் கும்பயன் படுமே!

செடிகொடிகள் மரங்கள் எல்லாம்

    செழிக்க வைக்கும் மழைத்துளிதான்!!


- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக