சனி, 24 டிசம்பர், 2022

நினைப்பும்….. நடப்பும்...

 

காடுவெட்டி நிலந்திருத்தி 
மாடுகட்டி ஏர்உழுது 

பாடுபட்டு வாழவெண்ணும் நெஞ்சம் - பசி

பக்குவமாய்ச் சேர்ந்ததிங்கே தஞ்சம்! 


தொண்டியற்றிக் காலமெல்லாம் 

மண்டுபுகழ்த் தேடிடவே 

கொண்டிருந்தேன் என்மனத்தில் எண்ணம் - ஆசை 

கூடவந்ததால் விளைவும் பின்னம்!


மாற்றலரைப் போர்க்களத்தில் 

தோற்கடிக்கச் செய்திடு நல் 

ஆற்றலினைப் பெற்றிருக்கும் காளை - பயம் 

அணைத்ததனால் வந்தபெயர் கோழை!


சாத்திரத்தைக் கற்றறிந்து

ஆத்திரத்தை வென்றடக்கும் 

பாத்திரமாய் நான்விளங்க லாச்சு - ஊர் 

பைத்தியமாம் என்றுரைக்கும் பேச்சு.

 

இல்லறமே மக்களுக்கு 

நல்லறமாம் என்றுரைக்கும் 

சொல்லறத்தை நம்பிவிட்டேன் பாவி - துயர் 

தோன்றியதால் ஏற்றுவிட்டேன் காவி. 


எடெடுத்துப் பாட்டெழுதி 

நாடகத்தை நான் நடிக்க 

ஓடவிட்டேன் தாளெழுது கோலை - அஃது 

உருவெடுத்ததாம் மரண ஓலை. 


- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)

முல்லைச்சரம்” - கவிதை ஏட்டில் வெளிவந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக