திங்கள், 1 ஜனவரி, 2024

புத்தாண்டே வருக!

எங்கும் பசுமை! இதழ்களில் பனித்துளி!

    பொங்கும் குளிரால் பொழுது புலர்ந்திட

ஈரா யிரத்துப் பதினான் காண்டே!

    சீராய் வந்தனை திருவடி வணக்கம்!

உலகம் உவப்ப உந்தன் அருளே

    நிலவுக! யாண்டும் நீணிலம் மீதில்

அன்பும் வளமும் அமைதியும் மக்கள்

    இன்புற் றிருக்க ஏற்றம் தருவாய்!

வறுமையும் பிணியும் வன்முறைக் கொடுமையும்

    சிறுமைப் படுத்தும் சாதி மதங்களின்

பிணக்கு ஒழிந்து பேருலகம் எல்லாம்

    இணக்கம் வளர இனிதாய் வருவாய்!

புத்தாண் டென்னும் பொன்மகளே!

    இத்தரை உன்னால் ஏற்றம் பெறுகவே!


- கொல்லிக்கிழான் (புலவர் வெ.இரா.துரைசாமி )

(2014 புத்தாண்டிற்காக எழுதப்பட்டது)

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

தீரன் சின்னமலை கும்மி நூல் வெளியீடு

கலியுகம் 5124 ஸ்ரீ சோபகிருது வருடம் புரட்டாசி 27 (அக்டோபர் 14, 2023) அன்று, வையப்பமலை தீரன் சின்னமலை வள்ளிக்கும்மியின் முதன் நிகழ்ச்சியை முன்னிட்டு தீரன் சின்னமலை கும்மி என்ற சிறுநூல் வெளியிடப்பட்டது.

பாலமேடு திரு ம.இராஜா மற்றும் திரு து.சீனிவாசன் அவர்கள் இணைந்து வெவ்வேறு நூல்களில் இருந்து கும்மிப் பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

நூலின் முன்னுரை:

வணக்கம். தீரன் சின்னமலை கும்மி என்ற இந்த சிறு நூல் பத்து சிறு பாடல்கள் கொண்ட தொகுப்பு. சின்னமலை கும்மி புலவர் குழந்தை மற்றும் கா. அரங்கசாமி தொகுத்தது. மரபாளன் உற்பத்திக்கும்மி புலவர் இராசு அவர்கள் வெளியிட்டது. இது வேளாளர் புராணத்தின் சிறு சுருக்கம். அர்த்தநாரீசுரர் கும்மி திருச்செங்கோடு அர்த்தநாரீசுரர் மீது பாடப்பட்டது. குமரமங்கலம் பாண்டீசர் மீது பாடப்பட்டது பாண்டீசர்கும்மி. கம்பர் வாழி கொங்கு வேளாளர் திருமணங்களிலே புலவரால் பாடப்படும். குலம் சம்பந்தப்பட்ட பாடல்கள், 96 கீர்த்தி தனி ஓலைச்சுவடியில் இருந்து எடுக்கப்பட்டது. மற்றது, கொடுமணல் இலக்கியம் மற்றும் அழகுமலை குறவஞ்சி இலக்கியத்தில் இருந்து தொகுக்கப்பட்டது. கொங்கு வேளாளர் திருமணங்களில் சீர் கேட்டல் என்ற நிகழ்ச்சியின் கேட்கப்படும் சீர்களின் தொகுப்பாக ஒரு பாடல், கொங்கு நாட்டு தாலாட்டு பாடல் ஆகியவைகளின் தொகுப்பாக இந்த சிறு நூல் அமைந்துள்ளது. வைப்பமலை தீரன் சின்னமலை வள்ளிக்கும்மியின் முதன் நிகழ்ச்சியின் நினைவாக இந்த நூல் வெளியிடப்படுகிறது. அமரர் புலவர்இராசு அவர்களுக்கும் அமரர் நாமகிரிபேட்டை துரைசாமி அவர்களுக்கும். PeeVee கிராபிக்ஸ்க்கும் நன்றி. 


அன்புடன் 

ம.ராஜா 

து.சீனிவாசன்






காவிரிப் புனல்...

காவிரிப் புனலே! காவிரிப் புனலே!
    மேவிடும் பெருக்கில் தாவிடத் துள்ளிக்
குடவரை மருங்கிற் குறுமுனி யருளால் 
    தடவரைப் பிளந்து ததும்பிடு நன்னீர்க்
காவிரிப் புனலே! காவிரிப் புனலே!

வரைபடு நற்பொருள் வாரிச் சுமந்தும்
    தரைப்பட எண்ணித் திரைபடர்ந் தோடித்
தடைப்படு பொருளை உடைப்பினிற் சாடி
    மடைப்புறம் நீங்கிக் கடைப்புறங் காட்டி 
உறுபுனற் பெருக்கின் ஓதை விளத்துத்
    துறுகற் றழுவித் தொடுமணற் சுரந்தும் 
கருங்கற் பாறை மருங்கிற் சாடி
    அருங்கலைப் பளிங்காய் ஆக்கிக் கன்னியர்
நெடும்புனற் றிளைக்கும் நீணறுந் துறையொடு
    மடுவிற் புகுந்து மஞ்சள் குழைத்தும்
இகுகரை மருங்கை உகும்படிச் செய்தும்
    வெகுவிரை வோடு வியன்மரக் காவில்
திரைநீர்க் கரத்தால் விரைமலர்க் கொய்தும்
    நரைசால் விளங்கும் நுரைசால் கொண்டு
வந்தனை யன்றோ? வந்தனை யன்றோ? 
    வெந்துயர் நீக்கிட வந்தனை யன்றோ?

சான்றோர் மனம்போற் சலனம் இன்றி
    ஆன்றவுன் பெருக்கை அடக்கியும் செல்குவை!
கல்லாப் புல்லர் கற்றன மென்று 
    சொல்லா லொலித்துச் சுகம் பெறல் போலக்
கல்மிசை இவர்ந்துப் புல்மிசைத் தாவி
    ஒல்லென் றொலித்தே ஓடினும் ஓடுவை!

அன்றியும்; 

        ஏருழவர் போரடித்துப் 
        பார்புரக்கச் சீர்செய்தல் 
        ஞாலத்தில் நீயருளும் 
        சீலத்தா லன்றோகாண்!

அதனால்; 

        உயிரூட்டும் இறையென்கோ?
        பயிரோம்பும் தாயென்கோ? 
        வானவரின் அமுதென்கோ?
        கானவரின் தருவென்கோ?
        அயராமல் நீநடந்தும் 
        துயரின்றிக் கீட்டிசையில்
        கடற்காதல்நனி விழைந்து 
        இடர்ப்பாடு பல்கொண்டும்

ஓடுவை! ஓடுவை! உன்னருங் கொண்கன் 
    வாடுவ னென்று வையகம் முழுதும் 
ஆர்த்துச் செல்லும் அழகைப் 
    பார்த்துத் திளைத்தேன் பைங்கூழ்ப் பரப்பிலே" 


“காவிரிக்கும் காவிரியே! கன்னடத்தார் நாட்டினின்று
    தாவிக் குதித்துவரும் தாயேநீ! - நாவினிக்க
பாடும் புகழ்பெற்றாய்! பைந்தமிழர் வாழ்வோங்க 
    காடும் மலைகடந்தாய் காண்!”


“பொங்கும் புனலாலே பொன்கொழிக்கும் அற்புதத்தை 
    எங்கும் புவியகத்தே யான்காணேன் - நங்கலிதீர்! 
நீர்ப்பாய்ச்சி நல்லுழவர் நீளுலகில் வெம்பசியை
    ஏர்ப்பாய்ச்சிச் சாடிடுவா ரீங்கு!”


“நல்லார் பெறும்பொருளை நாட்டுக்குத் தந்துபிறர்
    எல்லோரும் போற்ற இருப்பதுபோல் - தொல்லுலகில்
கொங்கலருஞ் சோலைக் குடகிற் பெறுநீரை
    எங்கட்குத் தந்துயர்ந்தா யின்று!”

- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)


திங்கள், 1 மே, 2023

உழவைப் பாடுவீர்…

மேதினி போற்றும் மே தின வாழ்த்துகள்!

ஏடெடுத்துக் கவிபாடிப் புகழைச் சேர்க்கும்

    இனியதமிழ்ப் பாவலரே! பெரியீர்! இந்த

நாடிருக்கும் நிலையறிந்து வறுமை போக்கி 

    நன்மைபல செய்திடவும், ஆக்கம் சேர்ந்து 

வீடங்கும் செல்வமணம் கமழ்ந்தே நிற்க 

    வீதியெங்கும் பொற்குவியல் மண்டிப் போகப்

பீடெடுத்துப் பாடிடுவீர்! உழைப்பை மக்கள்

    பேணிடவே பாடிடுவீர்! அதுதான் வேண்டும்.


பொங்கிவரும் பெருநிலவைத் தென்றல் தன்னைப் 

    பூவையரை, வானத்தை முகில்கள் தன்னை 

மங்காத பழம்பெருமை காதல் வாழ்வை 

    மலையெழிலைப் பூந்தளிரை அருவி மற்றும் 

இங்குள்ள பல்பொருளை இயற்கை தன்னை 

    எத்தனயோ விதமாகச் சுவையாய் நீங்கள் 

தங்கநிகர்த் தமிழாலே பாடி விட்டீர்! 

    சற்றேதான் உழவினையும் பாடு வீரே! 


வள்ளுவனும் உழவுக்குச் சிறப்புத் தந்தே 

    வையகத்தின் அச்சாணி என்றான் மற்றும் 

உள்ளுதொறும் சுவையூட்டும் சங்க நூல்கள் 

    உரைத்தனவே ஏருழவைப் புகழ்ந்தே பின்னைத் 

தெள்ளுதமிழ்ப் புலவனவன் கம்பன் தோன்றிச் 

    செம்மையுறும் ஏரெழுப தியற்றித் தந்தான்

உள்ளீரோ? அதற்குப்பின் உழவைப் பற்றி

    உரைத்தவர்யார்? சிறப்பாக இல்ல அன்றோ?.


“நிலமென்னும் நல்லாளைக் கலப்பை கொண்டு 

    நித்தமும் நாம் உழுதிடுதல் பாவம்” என்றே 

குலநீதி பேசுகின்ற வேத வாக்கிற் 

    குளிர்காய்ந்து வாழ்ந்திருந்தோம். உண்மை கண்டே 

பலனறிந்து ஏர்த்தொழிலைப் போற்றினோமா? 

    பயிர்த்தொழிலைப் பொங்கலன்று புகழ்ந்தே பேசிச் 

சலனமின்றிப் பிறநாளில் இருந்தே விட்டோம். 

    சாத்திரத்தின் மோகத்தில் ஆழ்ந்தே போனோம்.


ஆலயங்கள் ஒவ்வொன்றின் சிறப்பைப் பற்றி 

    ஆயிரத்தின் மேலாகப் பாக்கள் செய்து

கோலமுறும் தமிழாலே தலபு ராணங்கள் 

    குவித்து விட்டோம். ஆனாலும் கடவுள் தந்த

சீலமிகு நல்லுழவன் தன்னைப் பாடிச்

    சேவித்துக் கொண்டோமா? இறைவன் தன்னை

ஆலயத்தில் காண்பதற்குத் துடிக்கின்றோமே 

    அவ்வுருவை வயல்வெளியில் உழைக்கக் காணீர்!


- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

நாமக்கல் கூலிப்பட்டி சோழர்கால வீர நடுகற்கள்

 நாமக்கல் அருகே வீர கற்கள் கண்டுபிடிப்பு

தினமலர் (22-நவம்பர்-1982)

தஞ்சை, நவ. 22 - ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரண்டு மிக முக்கியமான சோழர்கால நடுகற்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத் துறையினர் முதல்முறையாகப் படி எடுத்து வந்துள்ளனர். நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிப் புலவர் வெ.ரா.துரைசாமி அளித்த தகவலின்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்நடுகற்கள் இரண்டும் படிஎடுக்கப்பட்டன. 

கி.பி. 907ம் ஆண்டில் சோழநாட்டு ஆட்சிப் பொறுப்பேற்ற மதுரைகொண்ட முதல் பராந்தகன் காலத்தைச் சேர்ந்ததாக முதல் நடுகல் கருதப்படுகிறது.


கொடுக்கமங்கலத்து ஊராழ்வான் சடையமரையனுடைய கால்நடைகளைக் கவர்ந்து கொள்ள, தந்தை சடையமரையன் மகனைக் காப்பாற்றும் பொருட்டு கொடுக்கமங்கலத்தூராழ்வானுடன் போர் செய்து மரணம் அடைகிறான். பின்னர் தந்தை சடையமரையனுக்கு மகன் ஆரையன் ஆயிரவன் நடுகல் எடுத்தான். ஆரையன் ஆயிரவன் இளஞ்சிங்களத்தரையன் என்று பட்டம் பெற்று கொடுக்கமங்கலத்தில் வாழ்கின்றான். 


ஆதித்த கரிகாலனின் நான்காம் ஆட்சியாண்டில் (கி.பி. 964) பகைவர்கள் கொடுக்கமங்கலத்து ஊர்க் கால்நடைகளைக் கவர்ந்து கொண்டுசெல்ல வந்தபோது ஏற்பட்ட போரில் இளஞ்சிங்களத்தரையனான ஆரையன் ஆயிரவன் மரணம் அடைகிறான் ஏகவீரமுத்தரையன் என்பவன் ஆரையன் ஆயிரவனுக்கு நடுகல் எடுத்து முன்பு நடப்பட்டி ருந்த தந்தையாரின் நடுகல் அருகிலேயே நட ஏற்பாடு செய்து நட்டகல் இரண்டாம் நடுகல் ஆகும். 


இன்றும் நாமக்கல் அருகே கூலிபட்டிப் பெருமாள் கோயிலின் தெற்கே தந்தை, மகன் ஆகியோருக்கு எடுத்த நடுகற்கள் இரண்டும் அருகருகே இருப்பது காண்போருக்கு வியப்புக்குரியதாக விளங்குகிறது.

 

10ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இடைப்பகுதியிலும் நாமக்கல் பகுதி பேரரசுச்சோழர்கட்கு உட்பட்டிருந்ததும் தெரிகிறது. இக்கல்வெட்டு அக்கால மொழிநடையை ஆராய மிகவும் பயன்படும். “தந்தை மகனைச் சேமஞ் செய்து எதிரேய் குடந்து சென்று பட்டான்" என்ற தொடரும், "கற்பொறிப்பிச்சான்" என்ற தொடரும் "வீரபாண்டிகன்", “கலிகாலச்சோழன்" "வீரமுச்சரையன் கல்லு நாட்டுவிச்சான்" என்ற தொடர்களும் மொழியியல் ஆய்வுக்கு மிகவும் உதவும் தொடர்களாகும். கால்நடைகளைக் குறிக்க ”காலி” என்ற சொல் குறிக்கப் பெற்றுள்ளன. "ஆரை" என்பது நாமக்கல்லின் பழைய பெயராகும். 


சிற்பத்தில் வில், அம்பு, வாள் இவைகளைப் பெற்ற வீரர்களின் ஆடை, அணிகலன்கள், தலையலங்காரம் ஆகியவை 10ம் நூற்றாண்டின் கலை, பண்பாட்டு, வரலாற்று ஆய்வுக்கு மிகவும் உதவுபவை. இவை குறித்துத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத்துறை தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. 


பத்தாம் நூற்றாண்டில் நாமக்கல்லில் மகனுக்காகப் போரிட்டு வீரமரணம் எய்திய தந்தை சடையமரையன் பழங்கால ஆயுதங்களுடன்.


- 22-நவம்பர்-1982 தினமலரில் வெளிவந்த செய்தி


கல்வெட்டுப் பாடங்கள்


தெற்கில் உள்ள நடுகல்:

“ மதிரை  கொண்ட கோப்பரகேசரிக்கு

…………………

கொடுக்க

  மங்கலத்

தூராழ்வன்

சடையமரைய

ன்  காலி கொ

ள்ள மகனை

ச் சேமஞ்

     செய்து

    எதிரே

    ய் குட

    ந்து

    சே

 ரப்பட்டா

  ன் ச

  டைய

   மரை

   யன் மக

ன் ஆரை

யன் ஆயி

  ரவன்

  கற் பொ

    றிப்

      பிச்

  சான் தந்

தை யா

ரைச்

சாத்தி ”


வடக்கில் உள்ள நடுகல்:

“  வீரபாண்

 டிகனை எறிஞ்

சு தலை கொ

   ண்ட கலி

கால சோழ

  ற்குச் செல்லா

    நின்ற யா

    ண்டு நாலா

   விது கொ

        டுக்க

         மங்

         கல

   த்தா

       ர்க்கும் ஆரைய

 ன்      ஆயிர

     வனான

        இளஞ்

   ங்கமு

         த் தரை

       யன் த

       ன் னூ

       ர்க் கா

         லி……

   ………….

   ………….

   ………….

   ………….

 விருன …… க

 வீர முச்சரை

யன் கல்லு

நாட்டு விச்சா

       ன் "



- வெ.இரா.துரைசாமி


சனி, 24 டிசம்பர், 2022

வரலாற்றில் ஏழூர்

 கொங்கு மண்டலத்தின் இருபத்துநான்கு நாடுகளுள் ஒன்று கீழ்க்கரைப் பூந்துறை நாடு. இதன் இணைநாடுகளுள் ஒன்று ஏழூர் நாடு. இவ்வூரைப்பற்றிய தொன்மைக்குச் சான்று பகர்வது தேவாரமாகும். கி. பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் தம் தேவாரப்பதிகத்துள் வைப்புத்தலமாக ஏழூரைக் குறிப்பிடுகின்றார். அதனால் இன்றைக்கு 1300 ஆண்டுகட்கும் முன்பே தலப்பெருமை பெற்று விங்கியது எனலாம்.

இன்று ஏழூரில் முற்றிலும் அழிந்துப்பட்ட சிவன் கோயிலின் தூண்கள் மாரியம்மன் கோயிலருகில் உள்ளன. அதில் உள்ள கல்வெட்டுகள் அத்தூண்களைத் தானம் செய்தவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அவர்களின் பெயர்கள் வருமாறு: 

1. வட கரையாற்றூர்ப்புல்லை வேட்டுவன கூத்தாடுந் தேவன் இருங்கோளநான் வலங்கை மீகாமன். 

2. பாராதாயன் நாராயணன் உமாசகிதனான திருவேங்கடத்து நம்பி. 


இதில், திருவேங்கடத்து நம்பியைப்பற்றி நாமக்கல்லில் உள்ள மூன்றம் இராசராசன் கல்வெட்டில் குறிப்பிடப்படுவதால் இக்கோயில் கி. பி. 12 ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.


சிவபெருமானைத் தேசீசுரர் என்றும், திருமாலைத் தேசி நாராயணப் பெருமாள் என்றும் குறிப்பிடுவர். மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் இவ்வூர் 'நாடாழ்வார் நாட்டு ஏழூர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு சுந்தரப்பாண்டியன் ஆட்சிக்காலத்தில் 'கொங்காள வீரசோழ மண்டலத்து நாடாழ்வார் நாட்டு ஏழூர்” என்றும், சுந்தரப்பாண்டியனின் பிற கல்வெட்டுகளில், 'வடகொங்கு ஏழூர் நாடு', என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. நாமக்கல் மலை மேல் உள்ள கோயில் கல்வெட்டு, அங்குள்ள எதிரிலிப்பெருமாளுக்கு ஏழூரில் நிலம் காணி கொடுக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. அதில் ஏழூர் சக்கரவர்த்தி என்ற அதிகாரியின் பெயர் உள்ளது.


ஏழூருக்கு மும்முடி சோழபுரம் என்ற பெயரும் வழங்கி வந்துள்ளளது. மும்முடி சோழன் என்பது முதல் இராசரசானுக்குள்ள பட்டப் பெயராகும். மூன்றாம் இராசேந்திரன் காலத்திய மேச்சேரியாம் பாளையம் (மல்லூர் அருகில்) கல்வெட்டும், நாமக்கல் பாறையில் உள்ள சுந்தரபாண்டியனின் கல்வெட்டும், சேலம் நெந்திமேடு கரிய பெருமாள் கரட்டின் வடக்கில் ஒரு தோட்டத்தில் உள்ள மூன்றாம் குலோத்துங்கள் காலத்திய கல்வெட்டும் இவ்வூரை மும்முடி சோழபுரம் எனக் குறிப்பிடுகின்றன.


இவ்வூரில் வணிகர்கள் சிறப்பாக இருந்துள்ளனர். வணிகக்குழுவைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டொன்றும் இவ்வூரில் உள்ளது. இவ்வூரைச் சேர்ந்த வணிகர்கள் பல இடங்களில் கிணறு வெட்டியும், கோயில் எடுப்பித்தும் கோயில்களில் இறைவன் திருமேனியை எழுந்தருளுவித்தும் உள்ளனர். நாமக்கல் பாறைக் கல்வெட்டு, இவ்வூரில் இருந்த 'குலோத்துங்கசோழ சிலைய செட்டி' என்ற வணிகனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இக்காலத்தும் தமிழகத்தில் 'ஏழூர்ச் செட்டிகள்' என்ற பிரிவினர் உள்ளனர். இவர்கள் ஏழூரைச் சேர்ந்தவர்களோயவர் இதானல் ஏழூர் ஒரு காலத்தில் வணிகச் சிறப்புடைய இருப்பிடமாக விளங்கியதை அறியலாம். 


ஏழூரில் வாழ்ந்த கட்டிக் கவுண்டன் என்ற தலைவனைப் பற்றி ''கட்டி மகிபன் பள்ளு" என்ற சிற்றிலக்கியம் ஒன்றுள்ளது, ஏழூர், கல்யாணி, முதலிய ஊர்களைப்பற்றியும் இந்நூல் கூறுகிறது. இஃது இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகட்கு முற்பட்டது எனலாம். ஏழூர் தேசி நாராயண பெருமாள் மீது கீரம்பூர் மதுரகவி அப்பாவு நாவலர் "தாய் மகள் ஏசல்" என்ற சிற்றிலக்கியத்தைப் படைத்துள்ளார். இப்புலவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவ்வூரில் உள்ள பேரேரியை கணிகையர் குலத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் கட்டியதாகக் கூறுகிறது. கி. பி. 7ஆம் நூற்றாண்டு தொடங்கி கி. பி.19 ஆம்  நூற்றாண்டுவரை சிறந்து விளங்கிய ஏழூர் இன்று ஒரு சிற்றூராகக் காட்சி தருகிறது. 


கட்டி மகிபன் பள்ளு கூறும் ஏழூர்  நாட்டு வளம்:

“கன்னலுஞ் சென்னெல் முத்தங் கொழிக்கும் 

காவில் தேன்மழை யாகத் துளிக்கும் 

அன்னந் தாமரை வாவியுள் தங்கும் 

அளிகள் கூடிக்கள் ளுண்டு மயங்கும் 

பன்னு மந்தி பலாக்கனி தொட்டுப் 

பறித்து மத்தள மென்றதைக் கொட்டும்

இன்னிலந் தன்னில் ஆதிக்கம் சேரும் 

ஏழூர் வளநா டெங்கள் நாடே!”


- வெ.இரா.துரைசாமி


குறிப்பு: ஏழூர் நாடு வரலாறு முதலில் சுருக்கமாக 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த சேலம் மாவட்ட வரலாற்று ஆவண ஆய்வுக்குழுவின் செய்திமடலில் வெளியிடப்பட்டது.  பின்னர் மேலும் சில செய்தி  மற்றும் படங்களுடன்  செப்டம்பர் 1,  1993 - இல் மாலைமுரசில் வெளிவந்தது. பின்னர் விரிவாக நூல் வடிவில் 2007  நவம்பர் 10 ஆம் நாள் "ஏழூர் நாடு வரலாறு மலர்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது.


J

நினைப்பும்….. நடப்பும்...

 

காடுவெட்டி நிலந்திருத்தி 
மாடுகட்டி ஏர்உழுது 

பாடுபட்டு வாழவெண்ணும் நெஞ்சம் - பசி

பக்குவமாய்ச் சேர்ந்ததிங்கே தஞ்சம்! 


தொண்டியற்றிக் காலமெல்லாம் 

மண்டுபுகழ்த் தேடிடவே 

கொண்டிருந்தேன் என்மனத்தில் எண்ணம் - ஆசை 

கூடவந்ததால் விளைவும் பின்னம்!


மாற்றலரைப் போர்க்களத்தில் 

தோற்கடிக்கச் செய்திடு நல் 

ஆற்றலினைப் பெற்றிருக்கும் காளை - பயம் 

அணைத்ததனால் வந்தபெயர் கோழை!


சாத்திரத்தைக் கற்றறிந்து

ஆத்திரத்தை வென்றடக்கும் 

பாத்திரமாய் நான்விளங்க லாச்சு - ஊர் 

பைத்தியமாம் என்றுரைக்கும் பேச்சு.

 

இல்லறமே மக்களுக்கு 

நல்லறமாம் என்றுரைக்கும் 

சொல்லறத்தை நம்பிவிட்டேன் பாவி - துயர் 

தோன்றியதால் ஏற்றுவிட்டேன் காவி. 


எடெடுத்துப் பாட்டெழுதி 

நாடகத்தை நான் நடிக்க 

ஓடவிட்டேன் தாளெழுது கோலை - அஃது 

உருவெடுத்ததாம் மரண ஓலை. 


- புலவர் கொல்லிக்கிழான் (வெ.இரா.துரைசாமி)

முல்லைச்சரம்” - கவிதை ஏட்டில் வெளிவந்தது.