வெள்ளி, 25 ஜூலை, 2025

அரசினர் உயர்நிலைப்பள்ளி தொ.சேடர்பாளையம் வெள்ளி விழா பாராட்டிதழ் 1951 - 1977



வெள்ளி விழா 1951 - 1977
அரசினர் உயர்நிலைப்பள்ளி தொ.சேடர்பாளையம்
பழைய மாணவ மன்றத்தினர் உவந்தளிக்கும்
வெள்ளி விழா பாராட்டிதழ்


“எங்கள் மனம்நிறைய ஏற்றமுடை நல்லறிவைத்

தங்கள் கனிமொழியால் தாமீந்த மங்காத

ஆற்றல் மிகுந்தநல் லாசான்கள் தம்மடியைப்

போற்றி வணங்குகிறோம் பொன்”


பாரோர்கள் போற்றுவளம் சூழ்ந்த சேடர்ப்

பாளையமாம் நற்பதியில் கலைகள் ஓங்கச்

சீராரும் செங்காட்டுப் பள்ளி தன்னைத்

திகழுமுயர் நிலைப்பள்ளி என்றே கொண்டு

பேராரும் நற்குருவாம் இனிய பண்பின்

பெருமைமிகு குருராசன் தலைமை ஆசான்;

ஏராரும் கட்டடங்கள் குழுவின் தலைவர்

இனிய புகழ்க் கைலாசக் கவுண்டர் தானாய்!


நிலையான புகழுக்கோர் வழியைச் செய்த

நெறிசான்ற நாராயணன் தலைமை ஆசான்;

அலையெனவே மாணாக்கர் ஓட ஆடி

அகமகிழ்ந்து விளையாட நிலமும் கண்டார்;

மலையாகப் பள்ளியினை உயர்த்திச் சென்ற

மல்புகழ் சவுண்டப்பன் தலைமை ஆசான்

விலையிலா கல்வியிலே சிறந்த ஏற்றம்

வேட்கைநீர் குடிநீர்க்கு வழியைச் செய்தார்


திங்களொன்றே தலைவரவர் பொன்னுச் சாமி 

சீலத்தால் மனங்கவர்ந்த சுந்தர ராசன் 

இங்குள்ள மாணாக்கர் நலனை வேண்டி 

ஏற்ற தொரு படக்கருவி அமைத்துத் தந்தார்

பொங்குபுகழ் நல்லியப்பன் தலைமை ஆசான் 

புன்னகையார் ஈஸ்வரனும் இடையிற் சின்னாள்

தங்கநிகர் பெரியன்ணன் இந்நாள் தலைமை 

சார்ந்துள்ளார் தேர்வினிலே விமுக்கா டுயர்வு

சான்றோர்கள் ஊரார் மற்றும் 

ஏற்றமுடை மாணாக்கர்கள் ஆசான் மார்கள் 

அள்ளிமிகத் தந்ததுடன் அரசும் ஈந்த 

அளப்பரிய செல்வத்தால் பள்ளிக்காக, 

வெள்ளி விழாக் கட்டடமும், அறிவின் தூண்டில்

விஞ்ஞான ஆய்வகமும், சைக்கிள் சாலை;

பள்ளியிலே தோன்றுதற்கு முதலாய் நின்றார் 

பண்புடையார் பெரியண்ணன் தலைமை ஆசான்

பெற்றோர்கள் ஆசிரியர் கழகம் கண்ட 

பேராளர் கந்தசாமிக் கவுண்டர் தாழும்

தற்போது தலைவரனப் பள்ளிக் குழுவில் 

சலியாது உழைக்கின்றார் தொடக்க காலம்

பற்றாளர் செங்கோட கவுண்டர் சேர்மன் 

பண்புடைநற் சான்றோராம் இராசுக் கவுண்டர்

மற்றுமிங்கே ஊரகத்தில் பள்ளி வாழ

மனமுவந்து கொடையளித்தோர் பல்லோ ருண்டு 


ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் ஆக 

ஓங்கிநற் சுப்பராயக் கவுண்டர் தாமும்

பேராட்சி விளங்கிடவே கிணற்று மோட்டார் 

பிறங்கிடவே வைத்திட்டார் முருவாக் கவுண்டர்

சீராகக் காற்றாடி போட்டுத் தந்தார்

திகழ்பழைய மாணாக்கர் சங்கம் தாமும் 

தரராளம் நல்லுதவி செய்தார் பள்ளித்

தழைத்திடவே வாழ்த்து கிறோம் வாழ்க!


“அறிவுக் கனலை அழுக்கறுக்கும் நன்மருந்தைச் 

செறியுமுயர் கல்வியெனும் தேனைக் குறியுடனே, 

பெற்றுக் கொடுத்த பள்ளி பேரறிவின் ஆலயத்தை

உற்றுப் பணிந்திடுவோம் ஓர்ந்து”


இடம்: தொ.சேடர்பாளையம்  பழைய மாணவ மன்றத்தினர்

நாள் : 22-3-1977          அரசினர் உயர்நிலைப்பள்ளி 

    தொ.சேடர்பாளையம்.

- கொல்லிக்கிழான் (புலவர் வெ.இரா.துரைசாமி ) 

குறிப்பு: அரசினர் மேல்நிலைப்பள்ளி தொ.சேடர்பாளையம் 75-ஆம் ஆண்டு பவள விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் புலவர் வெ.இரா.துரைசாமி அவர்கள் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவிற்காக மார்ச்சு 22, 1977-இல் எழுதிய பாராட்டிதழை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.