வியாழன், 1 மே, 2025

நாமக்கல் - சில வரலாற்றுக் குறிப்புகள்

நாமக்கல்! கடந்த நாற்பது ஆண்டுகால அளவில் நாட்டின் கவனத்தை ஈர்க்கும் சக்தியாய் விளங்கும் ஒரு காந்தக்கல். தொழில் வளர்ச்சியில் புத்துணர்வு பெற்று முன்னேறும் நகரம். லாரித் தொழில் வளர்ச்சியால் முன்னேறி இந்தியப் பெருவழிகளில் இரவும், பகலும் தம்புகழைப் பறை சாற்றுகின்றது. அத்துடன் வேளாண்துறை சார்ந்த துணைத் தொழிலான, கோழிப்பண்ணை, முட்டை உற்பத்தியில் உலகின் கண்களைத் தன்பால் இழுத்துள்ள ஒரு மாவட்டம். தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் வேகமாக வளரும் நகரம். மதுரை, திருச்சி, ஈரோடு, துறையூர், சேலம், பெங்களூர் ஆகிய நகரங்கட்குச் செல்லும் பெருவழியின் நடுநாயகமாய் விளங்குகின்றது. நாமக்கல் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளை இங்குக் காண்போம்.

1. சங்ககாலம்

நாமக்கல்லின் புகழும் பெருமையும் இன்று, நேற்று உருவானதன்று. ஈராயிரம் ஆண்டுகளை எட்டிப் பிடிக்கும் கால அளவு பெற்றது. சங்க இலக்கியங்களில் பலவாறு பாடப்பெற்ற நாமக்கல் கொல்லிமலையின் மேற்குச் சரிவில் அமைந்துள்ளது. கொல்லி மலையின் நீர்வளத்தால் கிழக்குப் பகுதியும், காவிரியின் நீர்ப் பெருக்கால் தெற்கும், மேற்குமாக மாவட்டம் வளம் பெற்று விளங்குகின்றது. கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரிக்குப் பின் தகடூர் அதிகமான் மரபினரின் பாதுகாப்பில் நாமக்கல் இருந்துள்ளது. அக்காலத்தில் இப்பகுதி கொல்லி கூற்றம் என்று வழங்கப்பட்டது. கொல்லிக் கூற்றத்தின் நடுகாவலனாக அதிகமான் மரபினர் இருந்தனர். கொல்லிமலையைக் கைப்பற்ற எண்ணிய தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, அதிகமானொடும், அவனுக்குத் துணை வந்த சோழ, பாண்டியர்களையும் வென்று கொல்லிமலையைக் கைப்பற்றினான். வெற்றியின் நினைவாகக் "கொல்லிப் பொறை” காசினையும் வெளியிட்டான். "கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறைய" என்று பதிற்றுப்பத்தில் பாடப்பெற்றான். 


“கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசை 
பல்வேல் தானை அதிக மானொடு 
இருபெரு வேந்தரையும் உடன்நிலை வென்று”

  

என்பது பதிற்றுப்பத்து (8ஆம் பத்து) கூறும் செய்தியாகும். 

2. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் 

சங்க காலத்திற்குப் பின் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் அதிகமான்கள் மீண்டும் வருகின்றார்கள். அறுபத்தி மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய புகழ்ச் சோழர் உறையூரிலிருந்து தமக்குரிய நகரமாகிய கருவூருக்கு வந்தார். சோழ அரசர்க்குத் திறை செலுத்த மன்னர்கள் திரண்டனர். திறை செலுத்தாத மன்னவனும் உள்ளானோ? என அரசர் வினவினார். “அளந்த திறை முறை கொணரா அரசன் ஒருவன் உளன்.” என்று அமைச்சர் விடையறுக்கின்றார். அவர் யார் என அரசர் வினவ, “அதிகன்னென்பான் அவன். அண்மையில் உள்ள உயர்ந்த மலைசூழ் மலை அரணுக்குள் இருப்பவன்” என அமைச்சர் பதிலுரைக்கின்றார். சோழர் படை சென்று அரணழித்து அவனைக் கொணர்க! என அரசர் ஆணையிடுகின்றார். அதன்படி சோழர் படை திரண்டு அதிகனின் மலை அரண்களைத் தகர்த்து அதிகனை தேடுகின்றது. அதிகமான், “கொடிமா மதில் நீடு குறும்பொறையூர்” அரணில் ஒளிந்து கொண்டான். சோழர் படைகள் அரண்களை அழித்து அதிகனைச் சிறைப்பிடித்துப் புகழ்ச் சோழரின் முன் நிறுத்துகின்றது. அதிகன் தங்கிய இடம் இன்றைய நாமக்கல்லே ஆகும். அக்காலத்தில் குறும்பொறையூர் என்று வழங்கப்பட்டது. “கொடி மா மதில் நீடு குறும்பொறையூர்” எனப் பெரியபுராணம் குறிப்படும் ஊர் நாமக்கல்!


“வடிவேல் அதிகன் படைமா ளவரைக் 
கடிசூழ் அரணக் கணவாய் நிரவிக் 
கொடிமா மதில் நீடு குறும் பொறையூர் 
முடிநே ரியனார் படைமுற் றியதே” 

என்ற பெரியபுராணப் பாடலினால் குறும்பொறையூரைச் சோழர் படை முற்றுகையிட்டது தெரிகிறது. கருவூரிலிருந்து சோழர் படை மோகனூர் வழியாகக் காவிரியைக் கடந்து வந்தது. நாமக்கல்லின் தெற்கில் நெடிய மலைத் தொடர்கள் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. இம்மலைத் தொடரையே ஓங்கு எழில் சூழ் மலையரணம் என பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. மலைத் தொடரைக் கடப்பதற்குச் சோழர் படை மலைத் தொடரைத் தகர்த்து வழி ஏற்படுத்தியது. அப்படித் தகர்க்கப்பட்ட இடம் இன்றைய கணவாய்ப்பட்டி ஆகும். இதையே “கடிசூழ் அரணக் கணவாய் நிரவி” எனப் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. கணவாய் வழியாக வடக்கு நோக்கி வந்த சோழர் படை இன்றைய நாமக்கல்லைச் சூழ்ந்து முற்றுகையிட்டது. நாமக்கல் குறும்பொறையூர் என்பது முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. குறும்பொறை என்பதற்கு, காடு, குறிஞ்சி நிலத்தூர் சிறுமலை எனப் பொருள். இவற்றுள் சிறுமலை என்பதே நாமக்கல். குறும்பொறையில் மண் கோட்டைக் கட்டி அதிகமான் வாழ்ந்துள்ளான். குறும்பொறையை ஒட்டிக் கீழே குடிமக்கள் வாழ்ந்தனர். மலையைச் சுற்றிலும் மதில்கள் பாதுகாப்பாக இருந்தன. அம்மதில்களில் கொடிகள் விளங்கின எனப் பெரியபுராணம் கூறுகின்றது. எனவே கி.பி.5-ஆம் நூற்றாண்டு அளவில் நாமக்கல் குறும்பொறையூர் என்று வழங்கப்பட்டது உறுதியாகிறது. 


3. கி.பி.8-ஆம் நூற்றாண்டில் 

கி.பி.5-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு எட்டாம் நூற்றாண்டில் பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் படையெடுப்பு நிகழ்ந்தது. அக்காலத்தில் கொல்லிக்கூற்றம் மழகொங்கம் என்று வழங்கப்பட்டது. மழவர்களின் ஆட்சிக் கீழ் இருந்த சோழ நாட்டுப் பகுதி மழநாடு என்றும் மழவர் ஆட்சிக்குக் கீழ் இருந்த கொங்குநாட்டுப் பகுதி மழகொங்கம் என்றும் வழங்கப்பட்டது. கொல்லிமலையும், குறும்பொறையூரும் மழகொங்கத்தில் இருந்தன. அப்பொழுதும் இப்பகுதியில் அதிகமான்கள் ஆட்சியே நடைபெற்றது. எட்டாம் நூற்றாண்டில் கி.பி.765 முதல் 790 வரை ஆட்சி செய்த நெடுஞ்சடையன் பராந்தகன் தன் சீவரமங்கலச் செப்பேட்டிலும் வேள்விக்குடிச் செப்பேட்டிலும், மழகொங்கத்தில் அதிகமானொடு சேரனையும், பல்லவனையும் வென்றடிப்படுத்தியதைக் குறிப்பிட்டுள்ளான். அதனால் நாமக்கல் பகுதி அக்காலத்தில் மழகொங்கத்தில் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.


“பூவிரியும் பொழிற் சோலைக்

காவிரியைக் கடந்திட்டு

அழகமைந்த வார் சிலையின் 

மழகொங்கம் அடிப்படுத்தி”

 

என்று வேள்விக்குடிச் செப்பேட்டிலும், 


“மாயிரும் பெரும்புனல் காவிரி வடகரை 

ஆயிரவேலி அயிரூர் தன்னிலும் 

புகழி யூரிலும் திகழ்வே லதிகனை 

ஓடுபுறங் கண்டவன் ஒலியுடை மணித்தேர் 

ஆடல்வெம்மா அவையுடன் கவர்ந்தும் 

பல்லவனும் கேரளனும் ஆங்கவற்குப் பாங்காகி” 

எனப் பல்லவனையும், சேரனையும் சேர்த்து வென்றதைச் சீவரமங்கலச் செப்பேட்டிலும் பாண்டியன் குறித்துள்ளான். பாண்டியன் வெற்றிபெற்று அதிகமானை மதுரையில் சிறைவைத்தான். இருப்பினும் அதிகமானின் வீரத்தையும், ஆற்றலையும் கண்டு பாண்டிய குடும்பத்தின் பெண்ணை திருமணம் செய்து கொடுத்து அனுப்பினான் எனக் கருதலாம். பாண்டியனுடை மகள் வயிற்றில் பிறந்தவனே அதிகமான் குணசீலன் என்பவன் ஆவான். இக்குணசீலனே புகழ் பெற்ற நாமக்கல் குடைவரைகளை எடுப்பித்தவன் ஆவான். இப்பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகன் தீவிர வைணவன். இவன் காலத்தில் பாண்டிய நாட்டில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் தமிழ் வேதம் பாடித் திருமாலின்புகழ் பரப்பியவர். நெடுஞ்சடையன் பராந்தகன் பெரியாழ்வார் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவன். அதனால் தான் சீவரமங்கலச் செப்பேட்டில், 


“பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு 

மணி நீள்முடி நில மன்னவன்”


என்று பாராட்டப்படுகின்றான். பாண்டிய நாட்டிலும் திருமாலுக்குப் பல கோயில்களை எடுப்பித்தான். அரசன் மட்டுமின்றி அவன் கீழ் அதிகாரிகளும் திருமாலுக்குக் கோவில் எழுப்பித்துள்ளனர். மாறன் காரி, மாறன் எய்னன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். மழகொங்கத்தை வென்ற பாண்டியன், 


“பூஞ்சோலை அணிபுறவில்

காஞ்சிவாய்ப் பேரூர்புக்குத்

திருமாலுக் கமர்ந்து றையக் 

குன்றமன்ன தோர் கோயிலாக்கி” 

எனக் கோவையை அடுத்த பேரூரில் திருமாலுக்குக் குன்ற மன்னதோர் கோயில் எடுப்பித்ததைச் சீவரமங்கல செப்பேடு குறிப்பிடுகிறது. இதனால் பாண்டியன், நெடுஞ்சடையன் பராந்தகன் திருமாலின் தீவிர அடியவனாக விளங்கியது தெளிவாகிறது. பாண்டிய குலத்து மகள் வயிற்றுப் பேரனாகிய அதிகமான் குணசீலனும் தன் தாய்வழி பாட்டனைப் போல வைணவ ஈடுபாடு கொண்டவனாக இருந்துள்ளான். அதனால் தான் "அதியேந்திர விஷ்ணுக் கிரகம்” என்றப் பெயரில் நரசிங்க பெருமாளுக்கும், பள்ளி கொண்ட பெருமாளாகிய ரங்கநாதருக்கும் குடைவரைக் கோயில்கள் எடுத்துப் பெருமைப்பட்டான் எனலாம். பாண்டியர்கள் சந்திர குலத்தினர் என்பதற்குத் திருவரங்கத்தில் உள்ள பாண்டியர் கல்வெட்டே சான்றாகும்.


“சமஸ்த ஜகதாதார சோமகுல திலக 

மதுராபுரி மாதவ”


என்பது கல்வெட்டு வாசகம். சோமகுல திலகன் என்பதால் பாண்டியர்கள் சந்திர குலத்திற்குத் திலகம் போன்றவர்கள் என்பது விளங்கும். உலகம் போற்றும் இக்குடைவரைகள் கலை வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை ஆகும். பல்லவர்காலக் கலைவடிவைக் கொண்டிருந்தாலும் பாண்டியர் தொடர்பால் உருவாக்கப்பட்டதே இக்குடைவரைகள்.


4. கி.பி.10-ஆம் நூற்றாண்டில் 

கி.பி.10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாமக்கல் சோழர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தது. ஆதித்த சோழன், முதற்பராந்தகன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், இராசராசன், இராஜேந்திரன் ஆகிய பேரரசர்களின் கல்வெட்டுக்கள் இப்பகுதியில் கிடைப்பதால் சோழருடைய ஆட்சி இப்பகுதியில் நிலைத்திருந்தது எனலாம். இன்று நாமக்கல் என்று வழங்கப்படும் பெயர் சோழர் காலத்தில் திரு ஆரைக்கல் என்று வழங்கப்பட்டதை கல்வெட்டு வாயிலாக அறியலாம். ஆரைக்கல் என்பதற்கு மதிலால் சூழப்பட்ட கல் என்பது பொருள். ஆரை-மதில். ஆரைக்கல் என்பது காலப்போக்கில் ராரைக்கல் > ராரிக்கல் > ராமக்கல் > நாமக்கல் என்று மாறியுள்ளது. 


கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரை ஆரைக்கல் என்றே வழங்கிவந்துள்ளது. பிற்காலத்தில் நாமக்கல் ஆகி அதற்கான தலபுராணங்கள் உருவாகி மலையில் நாமம் சாத்தப்பட்டது. சோழர்காலத்தில் வளநாடு, மண்டலம், கூற்றம், நாடு என்ற பிரிவுகள் உருவாகின. அதில் வடகரை “இராசாச்சிரைய வளநாட்டு வல்லவரையர் நாட்டு” என்ற பிரிவிலே நாமக்கல் வந்தது. பிற்காலச் சோழர் காலத்தில் “கொங்கான வீரசோழ மண்டலத்து” என்ற பிரிவிலும், “நாடாழ்வார் நாடு” என்ற பிரிவிலும் அடங்கியது. சோழர் காலத்தில் பல சதுர்வேதி மங்கலங்கள் உருவாயின. நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர்களுக்கு இறையிலியாக வளமான ஊர்கள் கொடுக்கப்பட்டது. கூலிப்பட்டி, பொம்மசமுத்திரம், மணப்பள்ளி, நன்செய் இடையாறு, பில்லூர், குன்னமலை, கதிராநல்லூர், பாச்சல், கல்யாணி, ஏழூர் ஆகிய ஊர்கள் சோழர் ஆட்சிக் காலத்தில் சிறந்து விளங்கின. தூசியூர் சோழர் காலத்தில் மிகச்சிறந்த வணிக நகரமாக விளங்கியது. 


5. கி.பி.13-ஆம் நூற்றண்டில் 

சோழர் ஆட்சிக்குப்பின் கி.பி.13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் செல்வாக்கு வளர்ந்தது. சடையவர்மன் சுந்தரபாண்டியன், இராசகேசரி, வீரபாண்டியன் காலக்கல்வெட்டுகள் நாமக்கல்லிலும், சுற்றுப்பகுதிகளிலும் கிடைத்துள்ளன. பாண்டியர்காலத்திலும் பல சதுர்வேதி மங்கலங்கள் உருவாயின. நாமக்கல், “வடகொங்கு ஏழூர்” நாட்டைச் சேர்ந்ததாக குறிப்படப்படுகின்றது. மலைமேல் கோட்டையில் உள்ள திருமால் கோவில், சுந்தரபாண்டியன் கல்வெட்டில் அருளாள விண்ணகரான எதிரிலிப் பெருமாள் என்று குறிப்பிடப்படுகின்றது. இக்கோவிலுக்கு நாமக்கல் பகுதியில் உள்ள 11 ஊர்களில் 11 காணி நிலம் கொடுக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இக்காலத்தில் கொங்கு 24 நாடு என்ற நாட்டுப்பிரிவும் வழக்கில் வந்தது. 


6. மதுரை நாயக்கர் ஆட்சியில் 

பாண்டியர் காலத்திற்குப்பின் விஜயநகர, மதுரைநாயக்கர் ஆட்சியில் நாமக்கல் வந்தது. மதுரை எழுபத்திரண்டு பாளையக்காரர்களில் சேந்தமங்கலம் இராமச்சந்திரநாயக்கர் மரபினரும் அடங்குவர். அவர் காலத்தில் நாமக்கல், பரமத்தி ஆகிய இடங்களில் கோட்டைகள் கட்டப்பட்டன. முற்காலத்தில் மலைமேல் மண்ணினால் கோட்டை கட்டப்பட்டிருந்தது. காலப்போக்கில் அவைகள் அழிவுற்றன. அதனால் பிற்காலத்தில் கற்களினால் கோட்டைகள் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டன. தொடர்ந்து வந்த மைசூர், ஆட்சியாளர்களும், ஆங்கிலேயர்களும் கோட்டையைப் பராமரித்து வந்தனர். 


பரமத்தி கோட்டைத் தலைவனாக இருந்த இளையா நாயக்கன், இராமச்சந்திர நாயக்கன் சார்பில் இராமப்பையனுடன் சேர்ந்து சேதுபதியோடு போரிட்டான் என்பதை இராமப்பையன் அம்மானை குறிப்பிடுகிறது. இக்காலத்தில் நரசிங்கப் பெருமாள் கோயில் பல மண்டபங்களும், நாமகிரித் தாயார் சன்னதியும் கட்டப்பட்டன. தாரமங்கலம் கட்டிமுதலிகளின் திருப்பணியும், நரசிங்கப் பெருமாள் கோவிலில் நடந்துள்ளது. பெருமாள் சன்னதியின் கீழ் உள்ள பெரிய மண்டபம் கட்டிமுதலிகளின் திருப்பணி ஆகும். கட்டிமுதலிகளின் சின்னமான வாடாமாலை, வண்ணத்தடுக்கு முதலியவை மண்டபத்தின் மேல் விதானத்தில் உள்ளது. மலையின் மேற்கில் கட்டிமுதலித் தெரு என்ற பெயரில் ஒரு தெரு இன்றளவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


நாமக்கல் குடைவரைகளைத் தவிர குறிப்பிடத்தக்க ஒன்று நாமக்கல் ஆஞ்சநேயர் ஆகும். நரசிங்கப் பெருமாளின் சன்னதியின் நேர் எதிரில் உயர்ந்த நிலையில் பெருமானைக் கைகூப்பி சேவித்து உள்ள காட்சி உள்ளத்தை உருக்குவதாகும். நாமக்கல்லுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் உள்ளது. எல்லா நாட்களும் திருவிழாதான் என்றபடி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இவ்வாஞ்சநேயர் 18-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோற்றுவிக்கப்பட்டது. மானத்தி பெரிய ராசாக்கவுண்டர் (மானத்தி ஜமீன்தார்) ஆஞ்சநேயருக்கு நந்தவனம் அமைத்து கொடுத்ததைப் பற்றி ஒரு கல்வெட்டுக் குறிப்பு உண்டு.

 

கி.பி. 1874-ஆம் ஆண்டில் முத்துகாப்பட்டி ஜமீன்தாரினியாக இருந்த முத்தியாலம்பாள் நரசிங்கப் பெருமாள் கோவில் கொடிக் கம்பத்திற்குப் பொன்தகடு வேய்ந்துள்ளார். அக்காலத்தில் அதன் மதிப்பு 12,000/- ரூபாய் ஆகும். இவ்வம்மையாருடைய கணவர் பொலமரெட்டியார் ஆவார். 


7. ஆங்கிலேயர் ஆட்சியில் 

சில காலம் மைசூர் ஆட்சி நடைபெற்றது. ஊர்பெயர்கள் கன்னட ஒலிப்பில் மாற்றம் செய்யப்பட்டன. கி.பி.1786-ல் கர்னல்-உட் அவர்களின் நடவடிக்கையினால் நாமக்கல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தது. அதே ஆண்டில் ஐதர்அலி நாமக்கல்லை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டார். மூன்றாம் மைசூர்ப் போரின் விளைவால் சேலம் கோவைப் பகுதிகள் நிரந்தரமாக ஆங்கிலேயர் கீழ் வந்தது. நாமக்கல் சேலம் மாவட்டத்தில் ஒரு வட்ட தலைநகரமாக விளங்கியது. கி.பி. 1910-ல் நாமக்கல் வட்டம் திருச்சி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் நாமக்கல் சேலம் மாவட்டத்திற்கு வந்தது. இதன் இடையில் தாத்தையங்கார்பேட்டை, காட்டுப்புத்தூர் ஆகிய பிர்காக்கள் திருச்சியோடு சேர்க்கப்பட்டது. அக்காலத்தில் ஈரோடு, நாமக்கல், அரியலூர் வழியில் புகைவண்டித் தொடர் அமைக்க திட்டமிடப்பட்டு என்ன காரணத்தினாலோ திட்டம் கைவிடப்பட்டது. 


8. விடுதலைப் போராட்டத்தில் 

விடுதலை போராட்டத்திலும் நாமக்கல் முன்னிலையில் விளங்கியது. “கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்திற்குச் சென்ற அறப்போர் தியாகிகளுக்கு வேதகீதமாக போராட்டப்பண் பாடிக்கொடுத்த கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவருடைய நினைவாக சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை எனப் பெயரிட்டு அரசு சிறப்பித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் நாமக்கல் பகுதியில் 42 பேரும், இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் 165 பேரும் முனைந்து சிறை சென்றனர். 14 பிப்ரவரி1934-ல் மகாத்மா காந்தி முதன் முதலில் நாமக்கல்லுக்கு வந்தார். மிட்டாதார் வெங்கடாசலம் செட்டியாரும், வக்கீல் நாகராஜ அய்யங்காரும் மற்றும் பலரும் காந்தியடிகளை வரவேற்றனர். கமலாலயக் குளக்கரையில் கூட்டம் நடைபெற்றது.


"இந்தியாவிலேயே இயற்கை அழகு நிறைந்த இடங்களில் ஒன்றிற்கு என்னை அழைத்து வந்து இருக்கின்றீர்கள். இத்தகைய கூட்டங்கள் நடத்துவதற்கு இந்த இடம் மிகவும் ஏற்றது.” என்று காந்தியடிகள் மனமுவந்து கூறினார். 


நன்றி !


- வெ.இரா.துரைசாமி - நாமகிரிப்பேட்டை

தானிய கிடங்கு திறப்பு விழா சிறப்பு மலரில் வெளிவந்த கட்டுரை